மும்பை: பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உயிரிழந்த நிலையில் அவருக்கு கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இரங்கல் தெரிவித்து இருக்கின்றார். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் ரோபோ சங்கர்.
மேடை நிகழ்ச்சி மூலம் தமிழக முழுவதும் பயணம் செய்து விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சம் தொட்டவர் ரோபோ சங்கர். சிறுவயதில் ரோபோ போல் வேடமடைந்து ரோபோ போல் நடந்து நடனமாடி ரசிகர்களின் வரவேற்பை பெற்றதால், அவருடைய பெயர் ரோபோ சங்கர் என மாறியது.

இந்த நிலையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர் அதிலிருந்து மீண்டு வந்து கொண்டு இருந்தார். இந்த தருணத்தில் யாருமே எதிர்பாராத வகையில் தனது 46வது வயதில் ரோபோ சங்கர் உயிரிழந்தார். ரோபோ சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் ஆல்ரவுண்டரான இர்ஃபான் பதான், ரோபோ ஷங்கருக்கு தனது இரங்கல் செய்தியை தெரிவித்து இருக்கிறார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த செய்தியை கேட்டு எனது இதயமே நொறுங்கி விட்டது. இவ்வளவு இளம் வயதில் மறைந்து விட்டார். அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கூறினார்.
அப்போது ரசிகர் ஒருவர் ரோபோ சங்கரின் படங்களை எல்லாம் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, நாங்கள் இருவரும் தமிழ் படத்தில் ஒன்றில் பணியாற்றி இருக்கின்றோம். பழகுவதற்கு ரோபோ சங்கர் இனிமையானவர். எப்போதும் தன்னடக்கத்துடன் நடந்து கொள்வார். நான் அவரை பார்க்கும் போதெல்லாம் அவருடைய முகத்தில் புன்னகை இருக்கும்.அதை என்னால் மறக்கவே முடியாது என்று கூறியுள்ளார். இர்பான் பதான் தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் ரோபோ சங்கரும் பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.