மும்பை : ஐசிசி t20 உலக கோப்பை முடிவடைந்த பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் விலகுகிறார். இதனை அடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக வர விரும்பும் நபர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ அண்மையில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.
இந்த நிலையில் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் இந்திய அணிக்கு வரப்போகிறார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ள நிலையில், சீனியர் வீரர்கள் தங்களுக்கு டிராவிட் வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள். சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இது குறித்து டிராவிட்டிடம் பேசியிருக்கிறார்கள்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 2025 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இந்திய அணி இந்த தொடருக்கு தொடர்ந்து இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு வந்தும் தோல்வியை தழுவி இருக்கிறது. தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பாதி வரை நடந்திருக்கிறது. இன்னும் சில போட்டிகள் எஞ்சி இருப்பதால் ராகுல் டிராவிட் இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக அடுத்த ஓராண்டுக்கு நிகழ வேண்டும் என்று சீனியர் வீரர்கள் டிராவிட்டிடம் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
இது குறித்து டிராவிட் பரிசீலினை செய்து வந்த நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவின் பேட்டி ஒன்று இதற்கு முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது. அதாவது இந்திய அணிக்கு ஒரு நாள் டி20க்கு என ஒரு பயிற்சியாளரும் டெஸ்ட் போட்டிக்கான ஒரு பயிற்சியாளரும் வருவார்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஜெய்ஷா, ரோஹித், விராட் கோலி போன்ற வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதால் டெஸ்ட்க்கு என தனி பயிற்சியாளர் தேவையில்லை என்ற முடிவில் பிசிசிஐ இருப்பதாக கூறினார்.
சீனியர் வீரர்கள் டெஸ்ட் என தனி பயிற்சி ஆள வேண்டும் என்று கூறி வந்த நிலையில், ஜெய்ஷாவின் இந்த பேட்டி டிராவிட்டுக்கு எதிராக அமைந்துள்ளது. இதனால் தாம் பயிற்சியாளராக தொடர்வதை பிசிசிஐ விரும்பவில்லை என்று புரிந்து கொண்ட ராகுல் டிராவிட் ஜெய்ஷாவின் பேட்டியை காட்டி தான் இனி பயிற்சியாளராக தொடர விரும்பவில்லை என்று கூறிவிட்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.