மும்பை: இந்திய டெஸ்ட் அணி வீரர் புஜாராவை இந்திய அணியில் சேர்க்கவில்லை என்றால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு அதிக அழுத்தம் ஏற்படும் என முன்னாள் வீரர் பாஸித் அலி எச்சரித்து இருக்கிறார்.
2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர்களை இந்திய அணி தொடர்ந்து வென்று இருக்கிறது.

மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய அணி ஹாட்ரிக் சாதனை படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அனுபவ டெஸ்ட் பேட்ஸ்மேன் புஜாராவை இந்திய அணியில் சேர்க்காமல் போனால் பேட்டிங் வரிசையில் பின்னடைவு ஏற்படும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாஸித் அலி எச்சரித்து இருக்கிறார்.
புஜாரா இல்லாமல் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு கடும் அழுத்தம் ஏற்படும் எனவும் அவர் கூறி இருக்கிறார். புஜாரா ஒருபுறம் பந்துகளை வீணடித்து ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை சோதிப்பார். அப்போது மற்ற பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் குவிக்கலாம் என யோசனை கூறி இருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 25 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ள புஜாரா 2074 ரன்கள் சேர்த்துள்ளார். அதன் சராசரி 49.38 ஆகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 சதம் மற்றும் 11 அரை சதங்கள் அடித்துள்ளார் புஜாரா.
இந்த நிலையில் பாஸித் அலி பேசுகையில், "புஜாரா இல்லாமல் இந்திய பேட்டிங் வரிசை ஆஸ்திரேலியாவில் பல சிக்கல்களை சந்திக்கும். புஜாரா இந்திய அணியுடன் பயணித்தால் இந்தியா ஹாட்ரிக் சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. அவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்லவில்லை என்றால் இந்திய பேட்டிங் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை சார்ந்தே இருக்கும். புஜாரா ஆஸ்திரேலியாவில் விளையாடினால் அவர் ஒருபுறம் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை சோர்வடைய செய்வார். அப்போது மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க முடியும்." என்றார்.