மும்பை: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்ல கேப்டன் ரோஹித் சர்மா வைத்துள்ள திட்டம் குறித்து அணித் தேர்வை வைத்து விமர்சகர்கள் சில கருத்துக்களை முன் வைத்து உள்ளனர். அதன்படி 9 பேட்ஸ்மேன்கள் மற்றும் 3 ஸ்பின்னர்களை பயன்படுத்துவது தான் இதன் முக்கிய அம்சமாக உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட உத்தேச இந்திய அணியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்களும், நான்கு சுழற் பந்துவீச்சாளர்களும் இடம் பெற்று இருக்கின்றனர். இந்த அணியில் வேகப் பந்துவீச்சாளர்களை விட அதிக சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பதை விமர்சகர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.

இதில் தான் இந்திய அணியின் திட்டமும் அடங்கியுள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது போட்டிகளை துபாயில் ஆட உள்ளது. அந்த மைதானம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு நிதானமாகவே பேட்டிங் செய்ய முடியும். பெரிய அளவில் ரன் குவிப்பது சாத்தியமில்லை. மேலும், அங்கு விக்கெட்டை தற்காத்து ஆடுவதும் கடினமே.
எனவே, இந்திய அணியில் நீண்ட பேட்டிங் வரிசை இருக்க வேண்டும். அதே சமயம் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பது அணிக்கு கை கொடுக்கும். இந்தத் திட்டத்தை முன்வைத்து தான் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. மூன்று சுழற் பந்துவீச்சாளர்களும், இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார்கள்.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, முகமது ஷமி ஆகியோர் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
இந்த அணியில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவரும் பேட்டிங் செய்யும் ஆற்றல் உடையவர்கள் என்பதால் இந்திய அணியில் ஒன்பதாம் வரிசை வரை ரன் குவிக்கும் திறன் உடைய பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள். அது பேட்டிங்கை பலப்படுத்தும்.
அத்துடன் கூடுதலாக ஹர்திக் பாண்டியா பகுதி நேர வேகப் பந்துவீச்சாளராக இருப்பார். வேகப் பந்துவீச்சாளர்களாக பும்ரா மற்றும் முகமது ஷமி இடம் பெறுவார்கள். பும்ராவுக்கு காயத்தால் ஆட முடியாத நிலை ஏற்பட்டால் அப்போது அர்ஷ்தீப் சிங் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார். இந்த பவுலிங் திட்டத்தை வைத்தே இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.