மும்பை : ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வரும் செப்டம்பர் இரண்டாம் தேதி எதிர்கொள்ள உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தற்போது இலங்கை புறப்பட்டு சென்றிருக்கிறார்கள்.
இதனிடையே பெங்களூரில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சிறப்பாக செயல்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் தொடக்க வீரர்கள் தடுமாறும் போது இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியை தழுவி விடுகிறது. ஆனால் ஆசிய கோப்பை தொடரில் ரோஹித் சர்மா பாகிஸ்தானுக்கு எதிராக மிக சூப்பரான ஒரு ரெக்கார்டை படைத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
ஆசிய கோப்பையில் மட்டும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போது ரோகித் சர்மா வேற லெவல் ஃபார்மில் இருந்திருக்கிறார். இதுவரை ஆசிய கோப்பையில் மட்டும் பாகிஸ்தானை ஏழு முறை ரோகித் சர்மா 50 ஓவர் கிரிக்கெட்டில் எதிர்கொண்டு இருக்கிறார். இதில் நான்கு அரை சதம், ஒரு சதம் என ரோகித் சர்மா பட்டையை கிளப்பி இருக்கிறார்.
ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 367 ரன்கள் பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் அடித்திருக்கிறார். இதில் சராசரி 61 ஆகும் ஆட்டமிழக்காமல் பூஜ்ஜியம், 58 , 22, 68, 56 ,52,111* ஆகிய ரன்களை பாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா அடித்திருக்கிறார்.
இந்த நிலையில் நடப்பு சீசனில் ரோகித் சர்மா பாகிஸ்தானுக்கு எதிராக முதல் லீக் ஆட்டத்தில் சதம் அடித்து அவரை கிண்டல் செய்யும் சிலருக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.மேலும் இலங்கை ஆடுகளம் கொஞ்சம் தொய்வாக இருக்கும். இதன் காரணமாக முதலில் விளையாடும் வீரர்கள் பெரிய ரன்களை குவிக்கும்போது அது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையும்.