இந்திய அணியை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வெற்றிப்பாதைக்கு வழிநடத்திய போதிலும், நட்சத்திர பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா கேப்டன் பதவியிலிருந்து எதிர்பாராத விதமாக நீக்கப்பட்டார். 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்காக ஒரு புதிய அணியை உருவாக்க பிசிசிஐ தேர்வுக் குழு இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. ஆனால், ரோஹித்தை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது தேவையற்ற கடினமான முடிவு எனப் பலரும் கருதினர்.
தேர்வுக் குழுவின் தலைவர் அஜித் அகர்கரால் இந்த முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு இம்முடிவில் முக்கியப் பங்கு உண்டு என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "இந்த முடிவின் முதன்மைக் காரணம் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் அஜித் அகர்கர் ஒரு வலிமையான ஆளுமை கொண்டவர். கடினமான முடிவுகளை எடுக்கத் தயங்காத உறுதியான தலைவர்," என்று கூறினார்.

"இருப்பினும், மறைமுகமாக வேறு யாராவது இவரைப் பயன்படுத்தி முடிவெடுத்தார்களா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். திரைக்குப் பின்னால் நடப்பவை ஒன் பிளஸ் ஓன் இரண்டு ஆகும். தலைமை தேர்வாளரால் வெளிப்படையாக முடிவு எடுக்கப்பட்டாலும், பயிற்சியாளரின் உள்ளீடு நிச்சயம் இருந்திருக்கும். இத்தகைய ஒரு முடிவை தனித்து எடுக்க முடியாது. இருவருமே சமமாக பொறுப்பு," என தனது கருத்தை வலியுறுத்தினார்.
2027 உலகக் கோப்பையை மையமாக வைத்து, இளம் வீரர் ஷுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். 38 வயதான ரோஹித் அடுத்த உலகக் கோப்பைக்குத் தகுதியானவர் அல்ல எனக் கருதப்பட்டது. இருப்பினும், தனது சீரான ஆட்டத்திறன், உடற்தகுதி மற்றும் உத்வேகத்தின் மூலம், உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை போட்டியிடும் ஆர்வம் தனக்கு இன்னும் உள்ளது என்பதை ரோஹித் நிரூபித்துள்ளார்.
அணியின் தற்போதைய நிர்வாக நிலை குறித்து மனோஜ் திவாரி தனது அதிருப்தியை வெளியிட்டார். "ஆடும் லெவனைத் தேர்ந்தெடுப்பதில் நிறைய நிலைத்தன்மையின்மை இருந்து வருகிறது. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒருநாள் போட்டிகளைக் காண்பதில் எனக்கு ஆர்வம் குறைந்துவிட்டது. டி20 உலகக் கோப்பையையும், சாம்பியன்ஸ் டிராபியையும் வென்ற கேப்டன் நீக்கப்பட்டு, புதியவர் ஒருவர் நியமிக்கப்படுவது தேவையானது அல்ல," என்று அவர் கூறினார்.
"ரோஹித்துடன் நான் விளையாடியதால், அவருடன் எனக்கு ஒரு பிணைப்பு உள்ளது. இந்த முடிவு இப்படி அமைந்தது எனக்குப் பிடிக்கவில்லை. உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு இவ்வளவு அளித்த ஒரு கிரிக்கெட் வீரருக்கு இந்த நடவடிக்கை அவமரியாதையாகத் தோன்றுகிறது. 2027 உலகக் கோப்பையில் ரோஹித் விளையாடுவது குறித்து ஏன் சந்தேகம் எழுப்பப்பட்டது என்று நான் ஆச்சரியப்படுகிறேன். அவரது திறனை சந்தேகிப்பது ஒரு தவறு," என அவர் தெரிவித்தார்.