இந்தூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நேற்று நடந்த ஆட்டத்தின்போது, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா இரண்டு சாதனைகளைப் படைத்தார்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் இந்தூரில் நேற்று இரவு நடந்த 34வது ஆட்டத்தில் பஞ்சாப், மும்பை அணிகள் மோதின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வென்றது.
ரோஹித் சர்மா 15 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து அணிக்கு வெற்றியை உறுதி செய்தார்.
டி-20 கிரிக்கெட் போட்டிகளில் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகள் என அனைத்தையும் சேர்த்து, 300 சிக்க்சர்கள் அடித்த முதல் இந்திய வீரரானார் ரோஹித் சர்மா.
டி-20 போட்டிகளில் 300 சிக்சர்களுக்கு மேல் அடித்துள்ள 7வது வீரராகவும் ரோஹித் உள்ளார். கிறிஸ் கெயில் இதுவரை 844 சிக்சர்கள் அடித்து, சிக்சர் கிங்காக உள்ளார்.
இதைத் தவிர, ஐபிஎல் போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் இரண்டாவதாக விளையாடும்போது, 17வது முறையாக ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார் ரோஹித். இந்த 17 முறையும் அவர் விளையாடும் அணி வெற்றி பெற்றுள்ளது. கவுதம் கம்பீர் 16 முறை இவ்வாறு நாட்அவுட்டாகாமல் இருந்து அவர் விளையாடிய அணி வென்றுள்ளது.