சென்னை : இந்திய அணி ரகசிய பயிற்சியில் ஈடுபட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள் ஊடகங்களை சேர்ந்த யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

இதுவரை இந்திய கிரிக்கெட் அணி இத்தனை கட்டுப்பாடாக யாரையும் உள்ளே அனுமதிக்காமல் பயிற்சியில் ஈடுபட்டதே இல்லை.
2023 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5 முதல் தொடங்கி நடக்க உள்ளது. இந்திய அணி அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தன் முதல் போட்டியில் மோத உள்ளது.
ரகசிய பயிற்சி : இந்த நிலையில், இந்திய வீரர்கள் போட்டி நடைபெற உள்ள சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஊடகங்கள் உட்பட யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இந்திய வீரர்கள் என்ன மாதிரியான பயிற்சி செய்கிறார்கள் என்பது வெளியே தெரியக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தனர்.
கால்பந்து அணிகள் போல : இதுபோன்ற ரகசிய பயிற்சி என்பதை கிரிக்கெட்டில் பார்ப்பது மிகவும் அரிது. பொதுவாக கால்பந்து அணிகள் இதுபோன்ற பயிற்சிகளை மேற்கொள்ளும். எதிரணி தங்களின் திட்டத்தை அறிந்து கொள்ளக் கூடாது என்பதால் அவ்வாறு கால்பந்து அணிகள் ரகசியமாக இருப்பார்கள்.
எந்த வீரருக்காக? : ஆனால், இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் ரகசிய பயிற்சி மேற்கொண்டு இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிச்சயம் அணியில் ஏதோ மாற்றம் இருக்கிறது. எதிர்பாராத ஒரு வீரரை களமிறக்கப் போகிறது இந்தியா. அணியில் களமிறங்கப் போகும் 11 வீரர்கள் யார் என்பதை வெளி உலகுக்கு காட்டாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே பயிற்சியாளர் ராகுல் டிராவிட் - கேப்டன் ரோஹித் சர்மா இவ்வாறு செய்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அணிக்கு செக் : உலகக்கோப்பை தொடருக்கு சில நாட்கள் முன்புதான், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் இந்தியா மோதியது. அப்போதே இந்திய வீரர்களின் பலம், பலவீனத்தை, தற்போது இருக்கும் ஃபார்ம் உள்ளிட்டவைகளை ஆஸ்திரேலிய அணி அலசி ஆராய்ந்து இருக்கும். எனவே, எந்த 11 வீரர்கள் ஆடப் போகிறார்கள் என்பதை ரகசியமாக வைத்து ஆஸ்திரேலியாவிற்கு செக் வைக்க திட்டமிட்டுள்ளது இந்திய அணி.