
எத்தனை ரன்கள்
இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 336 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 4வது டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் ஆஸி. 294 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம்

எப்படி
இந்தியாவிற்கு ஆஸ்திரேலியா 327 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த இலக்கை நோக்கி இந்திய அணி அதிரடியாக ஆடி வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் அவசரமாக ஆடிய ரோஹித் சர்மா தேவையின்றி 44 ரன்கள் இருக்கும் போது தவறான ஷாட்டை அடித்து அவுட்டானார்.

இன்றும் அவுட்
அதேபோல் இரண்டாவது இன்னிங்சிலும் பந்தை கணிக்க முடியாமல் தவறி 7 ரன்களுக்கு ரோஹித் சர்மா அவுட்டானார். ரோஹித் சர்மா தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். உடல் எடையை குறைத்துவிட்டு சிறப்பாக திரும்பி வந்து இருக்கிறார். ஆனாலும் தேவையின்றி ரோஹித் சர்மா அவுட்டாவதை வழக்கமாக வைத்துள்ளார்.

சிக்கல்
அதிரடியாக ஆடி வேகமாக ரன் எடுக்க வேண்டும் என்று ரோஹித் சர்மா விக்கெட்டை பறிகொடுக்கிறார். இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தரமாக இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக ரோஹித் சர்மா இப்படி அவசரப்பட்டு ஆடுகிறாரோ என்று கேள்வி எழுந்துள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இதேபோல்தான் ரோஹித் சர்மா ஆடினார்.

எதிர்பார்ப்பு
ரோஹித் சர்மாவின் இந்த ஆட்டம் பல கேள்விகளையும். விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. இந்தியாவில் சிகிச்சை பெற்று ஆஸ்திரேலியாவில் ஆட வேண்டும் என்று அடம்பிடித்து கிளம்பி வந்தவர் ரோஹித் சர்மா. இவர் ஆஸ்திரேலியா வந்த போதே அவர் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது அந்த எதிர்பார்ப்பை பெரிய அளவில் பூர்த்தி செய்யாமல் ரோஹித் சர்மா ஏமாற்றம் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications