ஆசிய கோப்பை தொடருக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இந்திய அணி இறுதி கட்டப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. பொதுவாக ஒரு மிகப்பெரிய தொடரை நாம் வெல்ல வேண்டும் என்றால் நமது குறைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும் நமது பலத்தை அதிகரிக்க வேண்டும். இந்த சின்ன திட்டத்தை தான் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பின்பற்றி இருக்கிறார். கடந்த காலங்களில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம் அவர்களின் இடது கை வேகப்பந்து வீச்சை நமது வீரர்களால் எதிர்கொள்ள முடியாதது தான்.

ஷாஹீன் அப்ரிடி இந்திய அணியின் டாப் 3 வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். இதனால் இந்தக் குறையை நீக்க வேண்டும் என்றால் இடது கை வேகப் பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை அதிகம் எதிர்கொள்ள வேண்டும். இதனை தான் தற்போது டிராவிட் செய்து வருகிறார். குறிப்பாக ரோகித் சர்மா எப்போதுமே இடது கை வேகப்பந்து வீச்சாளரின் பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறுவார்.
இதன் காரணமாக பயிற்சி முகாமில் சுமார் ஒரு மணி நேரம் ரோகித் சர்மா இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை தொடர்ந்து எதிர்கொண்டு வந்தார். இதேபோன்று விராட் கோலி சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள சற்று தடுமாறி வருகிறார்.இதனால் அவருக்கு தனி கவனம் செலுத்தப்பட்டது. பயிற்சி முகாமில் விராட் கோலி தொடர்ந்து சுழற் பந்துவீச்சை எதிர்கொண்டு வருகிறார்.
இதேபோன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட கே எல் ராகுலுக்கு விக்கெட் கீப்பிங் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அவருக்கு லேசான காயம் ஏற்பட்டு இருப்பதாக அஜித் அகார்கர் கூறிய நிலையில் அவர் இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் காயத்திலிருந்து திரும்பிய ஸ்ரேயாஸ் ஐயர் இந்த பயிற்சி முகாமில் தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறார். ஆல்ரவுண்டர் ஜடேஜா உள்ளிட்ட வீரர்களுக்கும் பேட்டிங் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. வரும் 29ஆம் தேதி வரை பயிற்சி முகாம் நடைபெறும் ஆசிய கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வரும் செப்டம்பர் இரண்டாம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.