இந்தியாவின் ஸ்கோர்
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது. கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர். இதனைத்தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 180 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி நேர திருப்பம்
ஆட்டத்தின் கடைசி ஓவரில் கூட ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 11 ரன்களே தேவைப்பட்டன. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த ஓவரை வீச் ஷமி களத்திற்கு வந்தார். முதல் 2 பந்துகளில் 4 ரன்கள் வர, அடுத்த 4 பந்துகளிலும் 4 விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தது. இதுவே இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ரோகித் சர்மா விளக்கம்
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து ரோகித் சர்மா பேசியுள்ளார். அதில், நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம் என நினைக்கிறேன். எனினும் 10-15 ரன்களை கூடுதலாக அடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கடைசிவரை களத்தில் ஒரு பேட்டர் இருக்க வேண்டும். அதனை சூர்யகுமார் யாதவ் செய்துக் கொடுத்தார். இந்த களத்தில் பந்துகளை அடித்து ஆடுவதைவிட, கிடைக்கும் கேப்பில் தட்டிவிட்டால் சுலபமாக ரன்களை குவிக்கலாம். அந்தவகையில் இது சிறந்த பயிற்சி ஆட்டம்.
ஷமி திட்டத்திலேயே இல்லை
முகமது ஷமிக்கு ஓவர் கொடுக்கும் திட்டமே கிடையாது. அவர் நீண்ட நாட்களுக்கு பின் வந்திருப்பதால், திடீரென கடைசி ஓவரை கொடுக்கலாம் என தோன்றியது. இக்கட்டான சூழலில் அவரை கொண்டு வந்து சவால் கொடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதை செய்தேன், அதன் பலனையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள் என ரோகித் சர்மா கூறினார்.