கொழும்பு : இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, அம்பயர்கள் போட்டியின் இடையே தாமதம் செய்த போது அவர்களுடன் வாக்குவாதம் செய்தது தற்போது தெரிய வந்துள்ளது.
இந்திய அணி கேப்டன்களில் ரோஹித் சர்மா, தோனி போல "கேப்டன் கூல்" எனவும் கூறி விட முடியாது. அதே போல, விராட் கோலி போல உணர்ச்சிப் பிழம்பாகவும் அவர் இருக்க மாட்டார். தன் இயல்பான உணர்ச்சிகளை மட்டுமே வெளிப்படுத்துவார்.

வியப்பு : சாதாரணமாக அவர் பீல்டிங் சொதப்பல்களின் போது தன் கோபத்தை காட்டுவார். அத்துடன் அதை பெரிதாக யாரும் எடுத்துக் கொள்ளவும் மாட்டார்கள். ஆனால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அம்பயரிடம் அவர் வாக்குவாதம் செய்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்ன நடந்தது? : ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 24.1 ஓவரில் இந்திய அணி 2 விக்கெட் இழந்து ஆடி வந்த போது மழையால் போட்டி தடைபட்டது. அதற்கு அடுத்த நாள் ரிசர்வ் நாளாக இருந்ததால் அன்று போட்டி தொடர்ந்தது. இந்திய அணி அபாரமாக ஆடி 50 ஓவர்களில் 356 ரன்கள் குவித்தது.
பாக். தடுமாற்றம் : அடுத்து பாகிஸ்தான் அணி இமாலய இலக்கான 357 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடத் துவங்கியது. அந்த அணி 44 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாற்றத்தில் இருந்தது. அப்போது மழை பெய்தது. குறிப்பாக, இத்தனை பெரிய இலக்கை துரத்த அந்த அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்த கேப்டன் பாபர் ஆசாம் ஆட்டமிழந்து இருந்தார். அப்போதே அவர்களின் தோல்வி பாதி உறுதியாகி விட்டது.
மழையால் தடை : அப்போது மைதானத்தில் லேசான மழை பெய்து சிறிது நேரத்தில் நின்று விட்டது. அதற்குள் ஊழியர்களும் முழு மைதானத்தையும் மூடி இருந்தனர். மைதானத்தில் எங்கும் மழை நீர் தேங்கவில்லை. ஆனாலும், அம்பயர்கள் கூடுதலாக 25 நிமிடங்கள் போட்டியை நிறுத்தி வைத்திருந்தனர்.
கடுப்பான ரோஹித் : அதைக் கண்ட இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கோபமடைந்தார். போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தும் அளவுக்கு இந்திய அணி அப்போது ஆதிக்கம் செலுத்தி வந்ததால் அந்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்பதில் குறியாக இருந்த அவர் நேராக அம்பயர்களிடம் சென்றார்.
ஏன் தாமதம்? : அவர்களிடம் ஏன் தாமதம்? என கேட்ட அவர் மைதானத்தில் எங்கும் நீர் தேங்கவில்லை என வாதம் செய்தார். அதன் பின் அருகே இருந்த மைதான ஊழியர்களிடம் என்ன நிலை உள்ளது என விசாரித்து பின் போட்டியை துவங்குமாறு அம்பயர்களிடம் கூறினார். அடுத்த சில நிமிடங்களில் போட்டி துவங்கியது.
பாகிஸ்தான் படுதோல்வி : அதன் பின் பாகிஸ்தான் அணி 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்திய அணிக்கு எதிராக தன் மிக மோசமான தோல்வியை பதிவு செய்தது. இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.