ராஜ்கோட் : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் ஐபோன் ராஜ்கோட்டில் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த புதன்கிழமை அன்று ராஜ்கோட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆடியது. அந்தப் போட்டியில் ஓய்வில் இருந்து வந்த ரோஹித் சர்மா பங்கேற்றார்.
போட்டிக்கு முந்தைய தினம், செவ்வாய்கிழமை அன்று செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு தான் ரோஹித்தின் ஐபோன் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த சந்திப்புக்கு பின் ரோஹித் சர்மா வலைப் பயிற்சிக்கு சென்று விட்டார்.

இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில்தான், ரோஹித் தன் ஐபோன் காணாமல் போனதை உணர்ந்து இருக்கிறார். உடனே ராஜ்கோட் மைதான நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் புகார் அளிக்காமல் காவல்துறை உதவியுடன் தேடி இருக்கின்றனர்.
போன் சுவிட்ச் ஆஃப் ஆகும் முன் ராஜ்கோட்டில் உள்ள ரிங் ரோட்டில் இருந்தது மட்டுமே தெரிய வந்துள்ளது. அதன்பின் போன் எங்கே சென்றது என கண்டுபிடிக்க முடியவில்லை. ரோஹித் சர்மா நேரடியாக காவல்துறையில் புகார் எதுவும் அளிக்கவில்லை என்றாலும், தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் தொலைபேசியைக் கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. ராஜ்கோட் காவல்துறையும் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாகவும், புகார் அளிக்கப்பட்டால் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
ராஜ்கோட்டில் உள்ள தகவல்களின்படி, அங்கு போன் திருடும் கும்பல் ஒன்று இருப்பதாகவும், அவர்கள் சர்வதேச போட்டிகள் மற்றும் இப்பகுதியில் நடக்கும் பிற திருவிழாக்களின் போது திருட்டு செயலில் ஈடுபடுகிறார்கள் என்று மக்கள் ஏற்கனவே அவர்கள் மீது புகார் அளித்துள்ளனர், ஆனால் இப்போது இந்திய கேப்டனின் தொலைபேசி தொலைந்து போனது அங்குள்ள அதிகாரிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐசிசி உலகக் கோப்பை 2023க்கு முன்னதாக இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவதற்காக கவுகாத்திக்கு சென்றது. ரோஹித் சர்மாவும் அணியுடன் புறப்பட்டார்.