ஐதராபாத்: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பந்துவீசுவதற்கு தான் அதிகமாக கஷ்டப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நட்சத்திர வீரர் ஷடாப் கான் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் அக்.14ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்களிடையே உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் போட்டி நடப்பதன் காரணமாக அகமதாபாத் ஹோட்டல்களில் அறைகளுக்கான கட்டணம் 100 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் விமான பயணத்திற்கான கட்டணம் உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் வீரர்கள், அதன்பின் ஐதராபாத் ஹோட்டல்களில் பிரத்யேக உணவு சாப்பிட்டு பொழுதை கழித்துள்ளனர். அந்த வீடியோ ரசிகர்களிடையே அதிகமாக ட்ரெண்டாகி வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஷடாப் கான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் முன்னணி வீரர்களில் ரோகித் சர்மாவுக்கு பந்துவீசுவது மிகவும் கடினமான ஒன்று. அவரை முதல் சில பந்துகளில் வீழ்த்த முடியவில்லை என்றால், அபாயகரமான வீரராக மாறிவிடுவார். அதேபோல் இந்திய அணியில் குல்தீப் யாதவின் அபாரமான ஃபார்மில் இருக்கிறார்.
ஐதராபாத்தில் களமிறங்கிய நொடி முதல் இந்திய ரசிகர்கள் அன்பு வியப்பை அளிக்கிறது. விமான நிலையத்தில் தொடங்கி ஹோட்டல் வரை அனைவரும் அன்பை பொழிந்து வருகிறார்கள். இந்திய உணவுகள் அதிக சுவையுடன் இருப்பதால், எங்களின் ஃபிட்னஸ் குறித்தி அணி நிர்வாகிகள் கவலையடைந்துள்ளனர். அந்த அளவிற்கு உணவின் சுவை உள்ளது. இதேபோன்ற அன்பை அகமதாபாத்தில் அக்.14ஆம் தேதியும் பெறுவோம் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்தியாவுக்கு வந்திருக்கிருக்கின்றனர். அந்த அணியின் முகமது நவாஸ் மற்றும் சல்மான் ஆகியோரை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் இந்தியாவுக்கு முதல்முறையாக வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.