மும்பை : இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் மூலம் ஐசிசி பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி மீண்டும் தவறவிட்டது. கேப்டன் ரோகித் சர்மா பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் தவறு செய்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

அஸ்வினை அவர் அணியில் எடுக்காதது பெரும் சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது. ரோகித் சர்மா வந்தவுடன் அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் தடுமாறி வருகிறார். இந்த நிலையில் வரும் ஜூலை மாதத்துடன் அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்பான சைக்கிள் தொடங்குகிறது. இதில் இந்திய அணி 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. ரோகித் சர்மாவுக்கு தற்போது 36 வயதாகிவிட்டது.
இரண்டு ஆண்டுகளில் அவருக்கு 38 வயதாகிவிடும்.இதனால் தன்னுடைய டெஸ்ட் எதிர்காலம் குறித்து ரோகித் சர்மா முடிவு எடுக்க உள்ளார். அதற்கு முதல் படியாக டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் கவனம் செலுத்துவதற்காக ரோகித் சர்மா இந்த முடிவை எடுக்கலாம் என தெரிகிறது.
மேலும் ரோகித் சர்மா முக்கியமான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக விலகியதும் அவருக்கு பின்னடைவாக அமைந்தது. இதனால் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி தொடங்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் உடனான தொடரில் அவர் கடைசியாக கேப்டனாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்திய அணி உலக கோப்பை தொடருக்கு பிறகு தான் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.
இதனால் புதிய கேப்டனை பிறகு தேர்வு செய்து கொள்ளலாம் என பிசிசி முடிவு எடுத்துள்ளது. அதற்குள் ரிஷப் பன்ட் அணிக்கு வந்தால் அவர் டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.