மும்பை : ரோஹித் சர்மா இன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பல சாதனைகளை படைத்து வந்தாலும், கோடிகளில் புரண்டாலும் அவரது இளமைக் காலம் ஏழ்மையில் தான் கழிந்தது.
அப்போது மட்டும் அவரது கிரிக்கெட் பயிற்சியாளர் தினேஷ் லாட் அவரது திறமையை ஒரு உள்ளூர் கிரிக்கெட் தொடரில் பார்க்காமல் போயிருந்தால், அவருக்கு பள்ளியில் கட்டணம் செலுத்த உதவாமல் போயிருந்தால், அவர் இன்று இத்தனை பெரிய உயரத்துக்கு வந்திருக்க மாட்டார். அந்த சம்பவம் தான் ரோஹித் சர்மாவின் வாழ்க்கையை மாற்றியது.
ரோஹித் சர்மா பள்ளியில் படித்த காலத்தில் தன் தாத்தா மற்றும் சித்தப்பாவின் வீட்டில் தான் தங்கி படித்து வந்தார். அவரது தந்தை போக்குவரத்து சார்ந்த நிறுவனம் ஒன்றில் குறைந்த சம்பளத்துக்கு பணியில் இருந்தார். அதை வைத்து குடும்பத்தை நடத்துவது சிரமமாக இருந்த நிலையில், ரோஹித் சர்மாவை தாத்தாவின் பொறுப்பில் விட்டு விட்டார்.

அவர்கள் வீட்டில் தங்கி படித்து வந்த ரோஹித் சர்மா, பள்ளி மற்றும் வெளியே நடைபெற்ற பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் ஆஃப் ஸ்பின்னராக பெயர் பெற்று இருந்தார். ஒரு சமயம், ஒரு கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவின் பந்துவீச்சை பார்த்த கிரிக்கெட் பயிற்சியாளர் தினேஷ் லாட், ரோஹித் சர்மாவை தான் கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் சுவாமி விவேகானந்தா பள்ளிக்கு வந்து விடுமாறு கூறினார்.
அது குறித்து பேச ரோஹித் சர்மாவின் சித்தப்பா மற்றும் தாத்தாவை சந்தித்து பேசினார் அவர். ஆனால், அந்தப் பள்ளியில் மாத கட்டணம் 275 ரூபாயாக இருந்தது. ரோஹித் சர்மா அப்போது மாதம் 30 ரூபாய் கட்டணம் கொண்ட பள்ளியில் தான் படித்து வந்தார். அதனால், பள்ளியை மாற்ற முடியாது என ரோஹித் குடும்பத்தினர் சொல்லி விட்டனர்.
ஆனால், தினேஷ் லாட் பள்ளி நிர்வாகத்திடம் பேசி ரோஹித் சர்மாவுக்கு கட்டணம் இல்லாமல் சேர்த்துக் கொள்ள ஏற்பாடு செய்தார். அதை அடுத்தே அந்த பள்ளியில் சேர்ந்து கிரிக்கெட் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு புகழ் பெற்ற கிரிக்கெட் வீரராக உயர்ந்து இருக்கிறார்.