மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டனாக விளங்கிவரும் ரோகித் சர்மா இன்னும் சில காலங்கள் தான் விளையாடப் போகிறார் என்று அண்மையில் செய்திகள் வெளியானது. t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் உடன் டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் ஓய்வு பெற போகிறார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் துபாயில் உள்ள வானொலி சேனலுக்கு, ரோகித் சர்மா பேட்டி அளித்திருக்கிறார். அதில், தமது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ரோகித் சர்மா, பல ஒழுக்கமான விஷயங்களை பேசி இருக்கிறார். அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆண்டுகளாக விளையாடி வருகின்றேன். இந்தப் பயணம் நிச்சயம் மகிழ்ச்சியை கொடுத்தது. இன்னும் சில ஆண்டுகள் நான் விளையாடுவேன். சர்வதேச கிரிக்கெட்டில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவேன். உங்கள் நாட்டு அணியின் கேப்டனாக நீங்கள் தலைமையேற்று பணிபுரிவது உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.
நான் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவேன் என்று என் கனவிலும் நினைத்ததில்லை. ஆனால் என்னிடம் நிறைய மக்கள் சொல்லியிருக்கிறார்கள். நல்ல மனிதர்களுக்கு நல்ல விஷயம் நடக்கும் என்று அது கேப்டன் விசயத்தில் பொருந்தும் என்று நினைக்கின்றேன். நான் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற போது ஒரு அணியாக நாங்கள் ஒரே பாதையில் செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.
நான் எப்போதுமே தனிப்பட்ட சாதனைக்காக விளையாடியது கிடையாது. தனிப்பட்ட இலக்கு என்று எதுவும் கிடையாது. 11 பேரும் இணைந்து எப்படி செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடி தர வேண்டும் என்பது குறித்து தான் நான் யோசிப்பேன். என் கிரிக்கெட் வாழ்க்கையில் பல உச்சங்களை விட சரிவை தான் சந்தித்து இருக்கிறேன்.
நான் ஒரு மனிதனாகவும் விளையாட்டு வீரராகவும் தற்போது நல்ல முறையில் இருக்கிறேன் என்றால், கடந்த காலத்தில் நான் கண்ட சரிவுகள்தான் காரணம் என்று ரோகித் சர்மா உருக்கமாக தெரிவித்துள்ளார். விராட் கோலி தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடுகிறார் என்று பலரும் விமர்சித்து வந்த நிலையில், தற்போது ரோகித் சர்மாவின் இந்த பேட்டி கவனிக்க தக்கதாக இருந்தது.