ராஜ்கோட் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டியில் அஸ்வின் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆடாத வாஷிங்டன் சுந்தர் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
அஸ்வின் உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவார் என கூறப்பட்ட நிலையில், அவரை அணியில் தேர்வு செய்யாமல் அவருக்கு பதிலாக சுந்தர் தேர்வு செய்யப்பட்டது பல கேள்விகளை எழுப்பியது. அதற்கான விடை இப்போது கிடைத்துள்ளது.

வீரர்கள் விலகல் : உலகக்கோப்பைக்கு முன் நடைபெறும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் வீரர்கள் சுழற்சி முறையில் ஆடி வருகின்றனர். அதன்படி மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன் சுப்மன் கில், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை பார்க்க சென்று விட்டனர், அடுத்து அவர்கள் உலகக்கோப்பை தொடருக்கு சென்று விட்டால் அதன் பின் 50 நாட்கள் அணியுடனே தான் பயணிக்க வேண்டும் என்பதால் அவர்கள் ஒரு போட்டியில் மட்டும் ஓய்வு எடுத்துக் கொண்டனர்.
துவக்க வீரர்கள் யார்? : சுப்மன் கில் இல்லாத நிலையில், துவக்க வீரராக யாரை ரோஹித் சர்மாவுடன் யாரை களமிறக்குவது என்றார் கேள்வி எழுந்தது. இஷான் கிஷன் தற்போது மிடில் ஆர்டரில் ஆடினாலும் அவர் துவக்க வீரர் தான். ஆனால், அவருக்கு காய்ச்சல் இருந்ததால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.
மற்ற வீரர்கள் : மற்ற பேட்ஸ்மேன்களான கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டரில் இப்போது தான் தங்களை நிலை நிறுத்திக் கொண்டுள்ளனர். அவர்களை இடம் மாற்றினால் அவர்களின் ஃபார்மை அது பாதிக்கலாம். ஜடேஜாவை ஆட வைக்கலாம். ஆனால், அவர் பின் வரிசை வீரர் என்பதால் முதல் ஓவரில் அனல் பறக்கும் பந்துவீச்சை சந்திப்பது கடினம்.
வேறு வழியில்லை : எனவே, வேறு வழியில்லாமல் சூழ்நிலை காரணமாக உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்ய வாய்ப்பு இல்லை என்றாலும் வாஷிங்டன் சுந்தரை அணியில் ஆட வைத்து இருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா. அவர் இந்தப் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி நிதான ஆட்டம் ஆடி 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
சுந்தர் தேர்வு செய்யப்படுவாரா? : உலகக்கோப்பை அணிக்கு வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட வாய்ப்பே இல்லை. அவர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இருக்கிறார். மூன்றாவது ஒருநாள் போட்டி முடிந்த உடன் அவர் சீனா கிளம்பி விடுவார் என பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே, அஸ்வினுக்கே இப்போதும் உலகக்கோப்பை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.