மும்பை: இந்திய அணியின் வெற்றி ஊர்வலத்தின் முடிவில் வான்கடே மைதானத்தில் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா குறித்து பேசுகையில் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். அப்போது "ஹர்திக், ஹர்திக்" என கோஷமிட்டனர். இதை அடுத்து ஹர்திக் பாண்டியா எழுந்து நின்று ரசிகர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். இந்த காட்சி நெகிழ வைக்கும் ஒன்றாக இருந்தது. அப்படி என்ன சொன்னார் ரோஹித் சர்மா?
2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. இது இந்திய அணியின் இரண்டாவது டி20 உலகக் கோப்பை வெற்றியாகும். இதை கொண்டாட முடிவெடுத்த பிசிசிஐ, மும்பை விமான நிலையத்திலிருந்து, வான்கடே மைதானம் வரை திறந்தவெளி பேருந்தில், இந்திய வீரர்களை அழைத்துச் சென்று ஊர்வலம் நடத்தியது. அதன் முடிவில் வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

அதில் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவர் குறித்து குறிப்பிட்டார். தென்னாபிரிக்க அணிக்கு எதிரான அந்த இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் 16 ரன்களை தடுத்தால் இந்திய அணி வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. அப்போது அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ரா தங்களின் 4 ஓவர்களையும் முழுமையாக வீசி முடித்திருந்த நிலையில், ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரை வீசினார்.
மிகவும் அழுத்தம் நிறைந்த அந்த ஓவரை அவர் கச்சிதமாக வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஆபத்தான பேட்ஸ்மேனான டேவிட் மில்லர் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் அந்த ஓவரில் தென்னாப்பிரிக்க அணி எட்டு ரன்கள் மட்டுமே எடுத்தது. அதில் ரபாடா விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார் ஹர்திக் பாண்டியா. அந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இந்திய அணியின் வெற்றிக்கு அவரும் முக்கிய காரணமாக அமைந்தார்.
இது குறித்து பேசிய ரோஹித் சர்மா, "இறுதிப் போட்டியில் முக்கியமான கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அவருக்கு எனது பாராட்டுக்கள். கடைசி ஓவரில் எத்தனை ரன்களை தடுக்க வேண்டும் என்பது தெரியும். அந்த ஓவரை வீசுவதற்கு கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும். அதை அவர் சரியாக செய்தார். அவருக்கு எனது பாராட்டுக்கள்" என்றார் ரோஹித் சர்மா.
ரோஹித் சர்மா ஹர்திக் பாண்டியா குறித்து கூறியவுடன், வான்கடே மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் விண்ணை மட்டும் அளவுக்கு "ஹர்திக், ஹர்திக்" என கோஷம் எழுப்பினர். இதே மைதானத்தில் தான் இரண்டு மாதங்கள் முன்பு ஐபிஎல் தொடரின் போது ஹர்திக் பாண்டியாவை விமர்சித்தம், அவருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தற்போது இந்திய அணிக்காக உலகக் கோப்பை வென்று கொடுத்த ஹர்திக் பாண்டியாவை அதே ரசிகர்கள் பாராட்டி கோஷம் எழுப்பினர். இதை அடுத்து எழுந்து நின்ற ஹர்திக் பாண்டியா, ரசிகர்களின் கோஷத்துக்கு இரண்டு கைகளையும் தூக்கித் தான் அதை ஏற்றுக் கொள்வதாக சைகை செய்தார். மேலும், ரோஹித் சர்மா தன்னை பாராட்டியதற்காக இரண்டு கட்டை விரல்களையும் உயர்த்தி காட்டி அவருக்கு நன்றி கூறினார்.