மும்பை : இந்திய டி20 அணியில் துவக்க வீரராக இடம் பெற்றுள்ள ருதுராஜ் கெய்க்வாட், தொடர்ந்து ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணியிலும் வாய்ப்பு பெற்றுள்ளார்.
இந்த நிலையில் ரோஹித் சர்மாவை பிசிசிஐ ஒதுக்குகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஓராண்டாக டி20 அணியில் ரோஹித் சர்மாவுக்கு இடம் அளிக்கப்படவில்லை என்பதை வைத்தே அப்படி ஒரு கேள்வி எழுகிறது. ஆனால், உண்மையில் ரோஹித் சர்மா தாமாகவே ஒருநாள் மற்றும் டி20 அணியில் இருந்து விலகி இருக்கிறார் என கூறப்படுகிறது. அதற்கு ஒரு காரணமும் கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர், ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது இந்திய அணி. இந்த மூன்று அணிகளிலும் துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்திய அணியின் வழக்கமான துவக்க வீரரான கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் மட்டுமே பங்கேற்க உள்ளார். அவர் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் இருந்து தற்காலிகமாக விடுப்பு எடுத்துக் கொண்டதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆனால், இதன் பின்னணியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அணியில் இடம் கொடுக்கவும், இளம் வீரர்கள் கொண்ட அணிக்கு அடுத்த கேப்டனை வளர்த்து எடுக்கவும் ரோஹித் சர்மா தற்காலிகமாக ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கலாம் என காரணம் கூறப்படுகிறது.
இந்திய அணியின் தற்போது சுப்மன் கில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் துவக்க வீரராக தன் இடத்தை தக்க வைத்துள்ளார். இன்னும் சில ஆண்டுகளுக்கு அவரை யாராலும் அந்த இடத்தில் இருந்து அசைக்க முடியாது. ஆனால், டி20 அணியில் ருதுராஜ் கெய்க்வாட் வேகமாக வளர்ந்து வருகிறார். அவர் வருங்கால கேப்டன் எனவும் சில முன்னாள் வீரர்களால் வர்ணிக்கப்படுகிறார்.
இந்த நிலையில், அவர் டெஸ்ட் அணியிலும் இடம் பெற்றுள்ளார். அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மாற்று வீரராகவே இடம் பெற்று இருந்தாலும் டெஸ்ட் அணியில் அவர் பெயர் இடம் பெற்று இருப்பது ஒரு தொடக்கம் தான், எப்போதாவது ரோஹித் அல்லது கில் காயத்தில் சிக்கினால் ருதுராஜ் டெஸ்ட் அணியில் துவக்க வீரராக தன் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு வழங்கப்படும். அதன் பின் அவர் தொடர்ந்து டெஸ்ட் அணியில் இடம் பெறலாம்.
டி20 அணியில் அவர் தன் இடத்தை தக்க வைத்து விட்டார் என்றே சொல்லலாம். ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பும் வரை ருதுராஜ் துவக்க வீரராக செயல்பட இருக்கிறார். ரோஹித் சர்மா இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதால், அதற்கு முன்பே அடுத்தகட்ட வீரர்களை தயார் செய்ய திட்டமிட்டு இருக்கிறார் ரோஹித் சர்மா.