கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி டையில் முடிந்ததை அடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்திய அணிக்கு 14 பந்துகள் மீதம் இருந்தும், ஒரு ரன் எடுக்க முடியாமல் போனது தனக்கு ஏமாற்றம் அளித்ததாக குறிப்பிட்டு புலம்பினார்.
இந்த போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் பல அனுபவ பேட்ஸ்மேன்கள் இருந்ததால் இந்த இலக்கு எளிதாக எட்டக்கூடியது என்றே ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால், ரோஹித் சர்மாவை தவிர மற்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலையாக நின்று ரன் குவிக்கவில்லை. ரோஹித் சர்மா 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பின்பு வரிசையாக விக்கெட் வீழ்ச்சி இருந்தது. ஒரு கட்டத்தில் 7 விக்கெட்களை இழந்த நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு 33 ரன்கள் தேவை என்ற நிலையில் பின்வரிசை வீரர்களுடன் இணைந்து சிவம் துபே ஆடினார். குல்தீப் யாதவ் அவுட் ஆனார்.
அதன் பின் சமாளித்து ஆடிய சிவம் துபே 25 ரன்கள் எடுத்து ஸ்கோரை சமநிலைக்கு கொண்டு வந்தார். ஆனால், அதற்கு அடுத்த பந்தில் அவர் ஆட்டம் இழந்தார். அதற்கு அடுத்து வந்த அர்ஷ்தீப் சிங் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். இரண்டு பந்துகளில் கடைசி இரண்டு விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதை அடுத்து போட்டி டையில் முடிந்தது. இந்த போட்டிக்கு பின் பேசிய ரோஹித் சர்மா, "இந்த ஸ்கோர் எட்டக் கூடியது தான். நாங்கள் நன்றாக பேட்டிங் செய்திருந்தால் இந்த ஸ்கோரை எட்டி இருக்கலாம். நாங்கள் ஆங்காங்கே சில இடங்களில் நன்றாக பேட்டிங் செய்தோம். ஆனால், தொடர்ந்து அதை செய்யவில்லை. துவக்கத்தில் நாங்கள் அதிரடியாக ஆடினோம். ஆனால், பத்து ஓவர்களுக்கு பின் சுழற் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் தான் போட்டி துவங்கும் என்பது எங்களுக்கு தெரியும்." என்றார்.
மேலும், "ஆனால், இடையே நாங்கள் விக்கெட்களை இழந்தோம். ராகுல் மற்றும் அக்சர் பட்டேலின் கூட்டணி எங்களை போட்டியில் மீண்டும் முன்னிலையில் வைத்திருந்தது. ஆனால், இறுதியில் ஏமாற்றமாக இருந்தது. 14 பந்துகள் மீதம் இருக்கும் போது ஒரு ரன் எடுக்க முடியாமல் போனது. இது போன்ற விஷயங்கள் நடப்பது தான். இலங்கை நன்றாக ஆடியது. இது நியாயமான முடிவு தான். ஆனால், நாங்கள் அந்த ஒரு ரன்னை எடுத்து இருக்க வேண்டும்." என்று தன் ஆதங்கத்தை கொட்டினார் ரோஹித் சர்மா.