சென்னை : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா இடையே பரபரப்பான சம்பவம் நடந்தது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் மிட்செல் மார்ஷ் டக் அவுட் ஆனார். அடுத்து வார்னர் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - மார்னஸ் லாபுஷேன் இணை மிக நிதானமாக ஆடத் துவங்கினர். நடு ஓவர்களில் எல்லாம் நிதானமாக ஆடிவிட்டு கடைசி சில ஓவர்களில் அடித்து ஆடலாம் என்ற திட்டத்தை ஆஸ்திரேலியா செயல்படுத்தியது.

அதனால், விரைவாக விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை ஸ்பின் பந்துவீச்சிலேயே முடிக்க நினைத்த கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து பீல்டிங் மாற்றுவதில் தீவிரமாக இருந்தார். ஆஸ்திரேலியா 100 ரன்களை கடந்த நிலையில், ஜடேஜாவை ஓவர் வீச அழைத்தார்.
அப்போது பீல்டிங் நிற்க வைப்பதில் ரோஹித் சர்மா ஏதோ ஒன்றை சொல்ல, அருகே வந்த விராட் கோலி பீல்டிங் மாற்றுவது குறித்து தனது யோசனையை சொன்னார். பின் ரோஹித் சர்மா - கோலி இருவரும் காரசாரமாக பேசிக் கொண்டனர். ரோஹித் அவரது யோசனைக்கு மறுப்பு கூறுவது போல கைகளை காட்டினார்.
அதன் பின் ஜடேஜா தன் ஓவரை வீசினார். ஒரு ஓவர் கழித்து மீண்டும் ஜடேஜாவே பந்து வீசினார். அப்போது ஸ்டீவ் ஸ்மித் பவுல்டு அவுட் ஆனார். அப்போது ரோஹித் சர்மாவை பார்த்து நான்தான் சொன்னேனே என்பது போல விராட் கோலி விக்கெட்டை கொண்டாடினார்.
அதைக் கண்ட ரசிகர்கள் முன்னாள் கேப்டன் விராட் கோலி சொல்லிக் கொடுத்து தான் ஜடேஜா விக்கெட் எடுத்தார் என பேசத் துவங்கினர். இது உண்மையல்ல என்றாலும், இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா - விராட் கோலி முன் எப்போதையும் விட ஒருங்கிணைந்து பணியாற்றியதை பார்க்க முடிந்தது.
அந்த விக்கெட்டுக்கு பின் ஆஸ்திரேலியா தொடர்ந்து விக்கெட்களை இழந்து மோசமான நிலைக்கு சென்றது. ஜடேஜா அதிரடியாக 3 விக்கெட்கள் வீழ்த்தினார். ஆஸ்திரேலியா 199 ரன்களுக்கு சுருண்டது.