
ஒருநாள் கிரிக்கெட் தொடர்
ஐசிசி-யின் 50 ஓவர் உலகக்கோப்பை இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் தான் நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகிவரும் இந்திய அணி இன்னும் 3 மாதங்களுக்கு எந்தவித ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட வாய்ப்பில்லை. ஏனென்றால் ஐபிஎல் தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என மற்ற வடிவ கிரிக்கெட் போட்டிகள் உள்ளன. எனவே ஆஸ்திரேலியாவுடனான தொடரை நன்கு பயன்படுத்திக்கொண்டாகும்.

சுவாரஸ்ய போட்டி
இந்நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் கோலி - ரோகித்திற்கு இடையே சுவாரஸ்ய போட்டி உருவாகியுள்ளது. அதாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இருந்து வருகிறார். 71 போட்டிகளில் விளையாடி 9 சதங்களை அடித்திருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக இருப்பதும் இரண்டு இந்திய வீரர்கள் தான்.

புள்ளிவிவரங்கள்
ரோகித் சர்மா 40 போட்டிகளில் ஆடி 8 சதங்களையும், விராட் கோலி 43 போட்டிகளில் விளையாடி 8 சதங்களையும் விளாசியுள்ளனர். எனவே இன்னும் ஒரே ஒரு சதத்தை இந்த தொடரில் அடித்துவிட்டால், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துவிடலாம். ஏன், 2 சதத்தை அடித்தால் சச்சினையே முந்திவிட வாய்ப்புள்ளது. எனவே ரோகித் சர்மாவா? விராட் கோலி ? என அடிச்சு காட்டு என்பதை போல ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ரோகித் சர்மா விலகல்
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது தனிப்பட்ட காரணங்களால் முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார். ஹர்திக் பாண்ட்யா தான் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி முதல் போட்டியிலேயே விராட் கோலி சதமடித்துவிட வேண்டும் என ரசிகர்கள் கோரி வருகின்றனர். நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையிலும் கோலி சதமடித்து நல்ல ஃபார்மில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











