மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்பின் 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு, ரசிகர்கள் மறக்க முடியாத அளவிற்கு மிகச்சிறந்த வரவேற்பை அளித்தனர்.
அதேபோல் பிசிசிஐ தரப்பில் இந்திய அணி வீரர்களுக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. பிசிசிஐ கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி தொடரை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதில் யார் யாருக்கு எத்தனை கோடி பிரித்து வழங்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களுக்கு தலா ரூ.5 கோடி அளிக்கப்படவுள்ளது. அதேபோல் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ரூ.5 கோடி பரிசு அளிக்கப்படவுள்ளதாக இருந்தது. ஆனால் ராகுல் டிராவிட் தரப்பில், பயிற்சியாளர்கள் அனைவருக்கும் சமமான தொகை வழங்கினால் போதும் என்று கேட்டுக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் ரூ.2.5 கோடி போதும் என்று பிசிசிஐ-யிடம் தெரிவித்தார்.
இதன்பின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2.5 கோடி அளிக்கப்படவுள்ளது. அதேபோல் உதவியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், ட்ரெயினர்கள் என்று அனைவருக்கும் தலா ரூ.2 கோடியும், தேர்வுக் குழுவினருக்கு தலா ரூ.1 கோடியும், ரிசர்வ் வீரர்களாக பயணித்த 4 பேருக்கும் தலா ரூ.1 கோடியும் அளிக்கப்படவுள்ளது தெரிய வந்துள்ளது.
இதனிடையே இந்திய அணியின் பயிற்சிக்கு உதவியாக இருக்கும் அனலிஸ்ட், த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்ட், பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்டோருக்கு பரிசுத்தொகை குறைக்கக் கூடாது என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கேட்டுக் கொண்டது தெரிய வந்துள்ளது. இதற்காக தனது பரிசுத்தொகையை விட்டுக் கொடுக்கவும் தயார் என்றும் ரோகித் சர்மா கூறி இருக்கிறார்.
இதுதொடர்பாக இந்திய அணியின் உதவியாளர்கள் குழுவில் உள்ள நிர்வாகி பேசுகையில், பிசிசிஐ தரப்பில் ரூ.125 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட போது, இந்திய அணிக்காக உழைக்கும் உதவியாளர்கள் யாருக்கும் பரிசுத்தொகையில் பாரபட்சம் காட்டக் கூடாது என்று வெளிப்படையாக கூறினார். அதுமட்டுமல்லாமல் எங்களுக்காக தனது பரிசுத்தொகையையும் விட்டுக் கொடுக்க தயாராக இருந்ததாக தெரிவித்துள்ளார்.