மும்பை: 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு எந்த கிரிக்கெட் வீரருக்கும் கிடைக்காத அதிர்ஷ்ட வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. இதுவரை எந்த ஒரு வீரரும் டி20 போட்டி, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் உலக அளவிலான ஐசிசி கோப்பை வென்ற அதே தொடரின் முடிவில் ஓய்வு பெற்றதில்லை. அந்த அரிய நிகழ்வை ரோஹித் சர்மா செய்து காட்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.
அடுத்து 2025 ஆம் ஆண்டு நடக்க உள்ள சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய இரண்டு உலக அளவிலான கோப்பைகளையும் வெல்ல கேப்டன் ரோஹித் சர்மா தயாராகி வருகிறார். 2024 டி20 உலகக் கோப்பை வென்றவுடன் ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது 37 வயதில் இந்த முடிவை அவர் எடுத்து இருந்தார். இது சரியான முடிவாக இருந்தது.

ஏனெனில், 37 வயதில் சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் விளையாடுவது சரியாக இருக்காது. இளம் வீரர்களுக்கு இனி இடம் கொடுக்க வேண்டிய நிர்பந்தமும் உள்ளது. அதே சமயம் உலகக்கோப்பை வென்று மாபெரும் சாதனை படைத்ததோடு, டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தால் அது மறக்க முடியாத தருணமாகவும் மாறியது. அடுத்து அவர் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறும் வயதை நெருங்கி இருக்கிறார்.
அடுத்து பிப்ரவரி மாதம் நடக்க உள்ள 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒரு நாள் போட்டி கோப்பையை இந்திய அணி வென்றால் அத்துடன் ரோஹித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது. அடுத்து 2025 ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறும். அதற்கு இந்திய அணி தகுதி பெறும் பட்சத்தில், அந்த கோப்பையையும் வென்று ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது.
டி20 உலகக் கோப்பையை வென்ற அடுத்த எட்டு மாதங்களில் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஓராண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என வரிசையாக மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் கோப்பைகளை வென்று, அதன் முடிவில் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றால் அது கிரிக்கெட் உலகில் மிகப்பெரும் சாதனையாக இருக்கும்.