For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவ்வளவு அலட்சியமா? இந்தியா படுதோல்வி அடையக் காரணமே ரோஹித் தான்.. லிஸ்ட் போட்ட ரசிகர்கள்

ராஜ்கோட் : மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 66 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது இந்திய அணி.

2023 உலகக்கோப்பை தொடருக்கு செல்லும் முன் இந்தியா ஆடும் கடைசி ஒருநாள் போட்டி இதுதான். அதில் போய் இப்படி தோற்று இருக்கிறீர்களே என ரசிகர்கள் கடும் கோபத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

வீரர்கள் விலகல் : இந்தப் போட்டி துவங்கும் முன்பே அணியின் தோல்விக்கான காரணங்கள் துவங்கி விட்டன. முதலில் முக்கிய வீரர்கள் பலர் இந்தப் போட்டியில் இருந்து விலகினர். உலகக்கோப்பை தொடருக்கு முன் தங்கள் குடும்பத்துடன் செலவிட வேண்டும் எனக் கூறி சுப்மன் கில், ஷமி, பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர்.

Rohit Sharmas decisions are the reason for India loss against Australia in 3rd ODI

இஷான் கிஷன் காய்ச்சல் : துவக்க பேட்ஸ்மேன் ஆகவும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகவும் நம்பகமான வீரராக இருந்த இஷான் கிஷன் இந்தப் போட்டியில் காய்ச்சல் காரணமாக பங்கேற்கவில்லை. இப்படி அணியின் முக்கிய வீரர்கள் பலர் இல்லாத அணியுடன் களமிறங்கினார் ரோஹித்.

சுந்தர் தேர்வு : முக்கிய வீரர்கள் இல்லை என்பதால் துவக்க வீரராக கே எல் ராகுல் அல்லது ஸ்ரேயாஸ் ஐயரை களமிறக்காமல், அஸ்வின் இடத்தை வாஷிங்டன் சுந்தருக்கு கொடுத்தார் ரோஹித் சர்மா. சுந்தர் உலகக்கோப்பை தொடரில் ஆடுவதும் சந்தேகம்தான். இந்த நிலையில், அவருக்கு துவக்க வீரர் இல்லை என்பதற்காக வாய்ப்பு அளித்திருக்க வேண்டுமா?

வேகப் பந்துவீச்சு எடுபடவில்லை : அடுத்து இந்தியா முதலில் பந்து வீசியது. பும்ரா, சிராஜ் ஆகியோர் ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி பவுண்டரிகள் விளாசிய போதே இந்த தட்டையான ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை என்பது தெரிந்து விட்டது. ஜடேஜா, சுந்தர் வீசிய முதல் சில ஓவர்களிலேயே ரன் அடிக்கும் வேகம் சற்றே குறைந்தது. அப்போதே சுழற் பந்துவீச்சாளர்களை முழுமையாக பயன்படுத்தும் திட்டத்தை ரோஹித் செயல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அதை செய்யவில்லை.

குல்தீப் யாதவ் ஓவர் : மாறாக, 24வது ஓவரில் தான் அணியின் விக்கெட் வேட்டையாடும் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவுக்கு ஓவர் கொடுத்தார் ரோஹித் சர்மா. குல்தீப் அப்போது பெரிய கூட்டணி அமைத்து 96 ரன்கள் சேர்த்து இருந்த மிட்செல் மார்ஷ் விக்கெட்டை வீழ்த்தி பெரிய திருப்புமுனை கொடுத்தார். ஆனால், அதற்குள் ஆஸ்திரேலியா பெரிய அளவில் ரன் குவித்து விட்டது.

சுந்தர் துவக்கம் மோசம் : ஆஸ்திரேலியா 353 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நிலையில், சுந்தரை துவக்க வீரராக தேர்வு செய்த ரோஹித் அது எத்தனை பெரிய தவறு என்பதை உணர்ந்து இருப்பார். பெரிய இலக்கை எட்ட பவுண்டரி அடித்து பட்டையைக் கிளப்பாமல், ரோஹித் சர்மாவுக்கு ஸ்ட்ரைக் கொடுப்பதில் தான் குறியாக இருந்தார் சுந்தர். 30 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து பந்துகளை வீணடித்தார். இதற்கு அஸ்வினை கூட அணியில் தேர்வு செய்து துவக்க வீரராக ஆட வைத்து இருக்கலாம். ரன் அடிக்காமல் அவுட் ஆகி இருந்தால் கூட பந்துகள் வீணாகி இருக்காது.

ராகுல், ஸ்ரேயாஸ் : அடுத்து மிடில் ஆர்டரில் கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயரால் குறைந்த ஓவர்களில் அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை தாங்க முடியவில்லை. கேப்டன் ரோஹித் சர்மா இதற்கான திட்டத்தை அவர்களுக்கு முன்பே சொல்லி இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் திட்டம் எதுவும் இன்றி ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற கணக்கில் ஆடி ராகுல் 26, ஸ்ரேயாஸ் 48 ரன்களில் ஆட்டமிழந்தனர். அவர்கள் ஆட்டம் மோசமில்லை என்றாலும் அவர்களிடம் எந்த சேஸிங் திட்டமும் இல்லை.

ஜடேஜா ஃபார்ம் அவுட் : அடுத்து நம்பிக்கை நாயகனாக இருந்து ஃபார்ம் அவுட் நாயகனாக மாறி உள்ள ஜடேஜா, இந்தப் போட்டியிலும் பேட்டிங்கில் பந்துகள் எங்கே இருக்கிறது என தடவினார். ஓவருக்கு இரண்டு, மூன்று பவுண்டரி அடிக்க வேண்டிய நேரத்தில் அடித்து ஆடி, வரவில்லை என்றால் அவுட் ஆகி இருக்கலாம். ஆனால், சம்பந்தமே இல்லாமல் 36 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அணியின் தோல்வியை உறுதி செய்த பின் நடையைக் கட்டினார்.

ரோஹித் தவறுகள் : அணித் தேர்வு, பந்துவீச்சில் குல்தீப் யாதவுக்கு முக்கியத்துவம் அளிக்காதது, சேஸிங் திட்டம் இல்லாதது ஆகியவை ரோஹித் சர்மாவின் முக்கியத் தவறுகள் ஆகும். அதுதான் இந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்.

ஒரே ஆறுதல் : ஆஸ்திரேலியா நிர்ணயித்த 353 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் இந்தியா 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ரோஹித் 81, கோலி 56 ரன்கள் எடுத்தது மட்டுமே இந்திய அணிக்கு ஆறுதலான விஷயம்.

Story first published: Wednesday, September 27, 2023, 23:12 [IST]
Other articles published on Sep 27, 2023
English summary
Rohit Sharma's decisions are the reason for India loss against Australia in 3rd ODI. One of them is selecting Wasington Sundar over Ashwin.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+