மும்பை: லக்னோ அணி வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை அணி தகுதிபெற்றது. குவாலிஃபையர் 2வது போட்டியில் குஜராத் அணியிடம் தோல்வியடைந்து மும்பை அணி 3வது இடத்தில் நிறைவு செய்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணி 5வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இதன் மூலமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் சரிசமமாக 5 போட்டிகளுடன் உள்ளனர். இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான பணிகளில் மும்பை அணி நிர்வாகம் தற்போதே தொடங்கியுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் பவுலிங் மற்றும் ஆல்ரவுண்டர்களின் செயல்பாடுகள் போதுமான அளவிற்கு இல்லாததே அந்த அணி தொடக்கத்தில் திணறியதற்கு காரணமாக அமைந்தது.
இதனால் சிறந்த ஆல்ரவுண்டர்களை அணிக்குள் கொண்டு வரும் வகையில் மும்பை அணி நிர்வாகம் செயல்பட்டுள்ளது. அதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட் லக்னோ அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் அவருக்கு பெரியளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ரொமாரியோ ஷெப்பர்ட் சூப்பர் ஸ்டார் வீரராக உருவெடுத்துள்ளார்.
கயானா அமேசான் வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு ரொமாரியோ ஷெப்பர்ட் முக்கிய காரணமாக அமைந்தார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கான ட்ரேட் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மும்பை அணி நிர்வாகம் லக்னோ அணியுடன் ட்ரேட் முறையில் ரொமாரியோ ஷெப்பர்டை ரூ.50 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதனால் மும்பை அணி நிர்வாகம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் ஜோர்டனை கழற்றிவிட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 18ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், நவம்பர் 15ஆம் தேதிக்குள் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அனைத்து அணிகளும் ஐபிஎல் நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.