மும்பை: ஐபிஎல் வரலாற்றில் அதிகப்படி விலையாக , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 1.78 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் 16,706 கோடி ரூபாய்) விற்பனை செய்யப்பட்டது. குமார் மங்கலம் பிர்லாவின் ஆதித்ய பிர்லா குழுமம், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், டேவிட் ப்ளிட்ஸரின் போல்ட் வென்ச்சர்ஸ், பிளாக்ஸ்டோன் ஆகிய நிறுவனங்கள் அடங்கிய கூட்டமைப்பு இதனை வாங்கியுள்ளது.
ஐபிஎல் வரலாற்றின் மிகப்பெரிய விற்பனையான இது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 1.63 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 15,300 கோடி ரூபாய்) விற்பனைச் சாதனையை முறியடித்தது. ஆர்சிபி-யை வாங்க ரஞ்சன் பாய் தலைமையிலான குழு மற்றும் EQT-பிரேம்ஜி இன்வெஸ்ட் கூட்டணி உட்படப் பலரும் கடும் ஆர்வம் காட்டினர்.

பிர்லா,ப்ளிட்ஸர், பிளாக்ஸ்டோன் டிஓஐ கூட்டமைப்பு, ஒருங்கிணைத்த பிறகு முன்னணியில் நின்றது. இவர்கள் அணியை வாங்கியது லீக் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இது உலகின் அதிக லாபகரமான விளையாட்டு சொத்தாக ஐபிஎல்-லின் நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது.

புதிய நிர்வாகத்தின் கீழ், ஆர்யமான் விக்ரம் பிர்லா தலைவராகவும், சத்யன் கஜ்வானி துணைத் தலைவராகவும் பொறுப்பேற்பார்கள். உரிமையாளர் குழுவில் போல்ட் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் டேவிட் ப்ளிட்ஸ் மற்றும் BXPE-ன் தலைமை நிர்வாக அதிகாரி விரால் படேல் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, "கடந்த இருபது ஆண்டுகளில், ஐபிஎல் பெரும் மதிப்புடன் உலகளாவிய விளையாட்டு சக்தியாக உருவெடுத்துள்ளது. ஆர்சிபி மூலம் குளோபல் ஸ்போர்ட்ஸ் தளத்தில் எங்கள் பாரம்பரியத்தை நீட்டிக்கிறோம். இந்தச் சொத்தின் பாதுகாவலர்களாக மாறியதில் மகிழ்ச்சி. பாரம்பரியத்தை வளர்க்க உறுதிபூண்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.
போல்ட் வென்ச்சர்ஸ் நிறுவனர் டேவிட் ப்ளிட்ஸர், "ஆர்சிபி உலகத்தரம் வாய்ந்த ரசிகர் பட்டாளம் கொண்டது. ஐபிஎல் ஒரு பெரிய வளர்ச்சி கதை. உலகின் பல்வேறு கிளப்புகளில் முதலீடு செய்துள்ள நான், ஆர்சிபி வாய்ப்பு தனித்துவமானது. சாம்பியன்ஷிப் வெற்றியை மேலும் கட்டியெழுப்ப எங்கள் பங்காளிகள் மற்றும் பிசிசிஐ-யுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளோம்," எனக் கூறினார்.
லீக்கின் பாரம்பரிய அணிகளில் ஒன்றான ஆர்சிபி-யை விஜய் மல்லையாவின் யுனைடெட் ப்ரூவரீஸ் குழுமம் ஆரம்பத்தில் 111.6 மில்லியன் டாலர்களுக்கு (சுமார் ₹1,043 கோடி) வாங்கியது. இந்த விற்பனை அசல் விலையிலிருந்து 1,360% என்ற மிகப்பெரிய உயர்வை பெற்றுள்ளது.
நிதி மோசடிகள் மற்றும் கடன் இயல்புநிலையைத் தொடர்ந்து 2016-ல் மல்லையா வெளியேறும் வரை, அவர் அணியின் முக்கிய முகமாகத் திகழ்ந்தார். பின்னர், பிரிட்டிஷ் பான நிறுவனமான டியாகோ, யுனைடெட் ஸ்பிரிட்ஸை கையகப்படுத்தியதால் ஆர்சிபி உரிமையும் அதற்குச் சென்றது.
டியாகோ நிர்வாகத்தின் கீழ், ஆர்சிபி மகளிர் அணி 2024-ல் தனது முதல் மகளிர் பிரீமியர் லீக் (WPL) பட்டத்தையும், ஆண்கள் அணி 2025-ல் தனது முதல் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) பட்டத்தையும் வென்றன. இந்த ஆண்டு ஸ்மிருதி மந்தனா தலைமையிலான மகளிர் அணி இரண்டாவது WPL பட்டத்தையும் தட்டிச் சென்றது.
ஆர்சிபி புதிய உரிமையாளர்கள், இரு போட்டிகளிலும் நடப்பு சாம்பியனாக இருக்கும் ஒரு அணியைப் பெறுகின்றனர். ஸ்மிருதி மந்தனா, விராட் கோலி போன்ற இந்தியாவின் பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் உள்ளனர். பெங்களூரு இருப்பிடம் மற்றும் வலுவான பிராண்ட் காரணமாக RCB, ஐபிஎல்-லின் மிகவும் மதிப்புமிக்க அணியாகக் கருதப்படுகிறது.