பெங்களூர்: 2025 ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இதை அடுத்து அகமதாபாத்திலிருந்து பெங்களூரு செல்லும். பெங்களூரு அணி வீரர்கள் அங்கு பேருந்தில் வெற்றிப் பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். இது குறித்த நேரம் மற்றும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதியம் 1.30 மணிக்கு பெங்களூர் அணி வீரர்கள் பெங்களூர் நகரத்துக்கு வர இருக்கிறார்கள். மாலை 4 மணி முதல் 5 மணி வரை கர்நாடக முதல்வரை நேரில் சந்திக்கிறார்கள். 5 மணிக்கு விதான சவுதாவில் இருந்து சின்னசாமி மைதானம் வரை மேற்கூரை இல்லாத திறந்தவெளி பேருந்தில் ஊர்வலம் செல்ல உள்ளனர். 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
அதே சமயம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர்கள் நேற்று இரவு ஆர்சிபி வெற்றி பெற்றபோது எல்லை மீறி நடந்து கொண்டனர். காவல்துறையினர் தாக்குதல் நடத்த வேண்டிய அளவுக்கு நிலைமை சென்றது. இந்த நிலையில், திறந்தவெளி பேருந்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் கோப்பையுடன் பயணம் செய்தால், அப்போது ரசிகர்கள் என்ன செய்வார்கள், எப்படி நடந்து கொள்வார்கள் என்ற அச்சமும் உள்ளது.

நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதை அடுத்து ஐபிஎல் தொடரில் முதன்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றது.
சுமார் 18 ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வெல்லும் என நம்பிக்கையுடன் காத்திருந்த அணி ரசிகர்கள், பெங்களூருவில் நேற்று இரவு எல்லை மீறிய வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு போட்டி முடிவு வெளியான நிலையில், அதன் பிறகு வானவேடிக்கைகளையும், சரவெடியையும் கொளுத்த தொடங்கிய ரசிகர்கள் காலை வரை அதை தொடர்ந்தனர்.
இரவு நேரத்தில் பெங்களூருவின் சாலைகள் முழுவதும் நிறைந்திருந்தனர் அந்த அணியின் ரசிகர்கள். சில இடங்களில் அவர்களின் ஆட்டம் அத்துமீறியதை அடுத்து காவல்துறையினர் லத்தி மூலம் தாக்குதல் நடத்த வேண்டி வந்தது.
இந்த நிலையில், அகமதாபாத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பெங்களூருவில் இந்த வெற்றி கொண்டாட்டத்தை நடத்த முடிவு செய்து இருக்கிறது. இந்த ஊர்வலம் பாதுகாப்பாக நடக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.