மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணியாக இருந்தாலும், 2025 ஐபிஎல் தொடரில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பிலிருந்து வெளியேறும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் முன்னாள் வீரரான ஆர்.பி. சிங், இது தோனி எப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகளுக்கு காரணமாக இருந்தார், இப்போது ஏன் அந்த அணி சரியாக விளையாடவில்லை என்பது பற்றி பேசினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் தோனிக்கு தான் செல்ல வேண்டும் என்றார் ஆர்.பி. சிங். அவர் "போட்டியில் எப்போது எந்த பந்துவீச்சாளரை பந்து வீசச் செய்து விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும், பேட்ஸ்மேன்களுக்கு அவர்களது பணி என்ன என்று முன்பே சொல்வது என பல்வேறு விஷயங்களைச் செய்தார். இந்த அணியை ஒவ்வொரு ஆண்டும் வழிநடத்தி வீரர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்தார்" என்றும் அவர் கூறினார்.

ஆர்.பி. சிங் தொடர்ந்து பேசுகையில், "தோனி இப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றியை நோக்கி வழிநடத்த முடியும். கோப்பை வெல்ல முடியும். ஆனால், அந்த அணியில் இருக்கும் வீரர்கள் நன்றாக விளையாடவில்லை" என்றார்.
மேலும், "தோனி நீண்ட நேர அணி கூட்டங்களை நடத்துவதில் விருப்பமில்லாதவர். அந்த அணியில் இருக்கும் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள் என்பதால் அவர்களின் பணி என்ன என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் எப்போதும் முன்கூட்டியே திட்டமிடல்கள் அதிக அளவில் இருக்காது. எல்லாமே ஆடுகளத்தில் வைத்து செய்யப்படும் திட்டங்களாகத்தான் இருக்கும்" என்றார் ஆர்.பி. சிங்.
இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி அதில் ஏழு தோல்விகளை சந்தித்துள்ளது. இனி வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றாலும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாது எனப்படுகிறது. மற்ற அணிகள் அதிக புள்ளிகள் உடன் இருப்பதால், பத்தாவது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணியால் அவர்களின் உந்த முடியாத நிலை உள்ளது.