
இந்திய அணியில் தோனி, ஆர்பி சிங்
தோனி இந்திய அணியில் இடம் பெற்ற பின் ஓராண்டு கழித்து அணியில் இடம் பெற்றவர் தான் ஆர்பி சிங். இருவரும் அப்போது சக வீரர்களாக நண்பர்களாக இருந்தனர். இருவரும் இந்திய அணியின் எதிர்கால வீரர்களாக கருதப்பட்டனர்.

சிறப்பான ஆட்டம்
இடையே தோனி 2007இல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் சந்தித்த முதல் தொடரான 2007 டி20 உலகக்கோப்பை தொடரில் ஆர்பி சிங் முக்கிய பங்காற்றினார். அந்த தொடரில் ஏழு போட்டிகளில் 12 விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

டெஸ்ட் செயல்பாடு
அந்த காலகட்டத்தில் ஆர்பி சிங் விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளராக இந்திய அணியில் பார்க்கப்பட்டார். இங்கிலாந்து மண்ணில் 21 ஆண்டுகள் கழித்து இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்ற போது அதில் ஆர்பி சிங் சிறப்பாக ஆடி இருந்தார். லார்ட்ஸ் மைதானத்தில் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.

தடுமாற்றம்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அந்த அணியின் கோட்டையாக கருதப்படும் பெர்த் மண்ணில் இந்தியா டெஸ்ட் போட்டியை வென்ற போது அதில் ஆர்பி சிங் ஆறு விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அதன் பின் காயம், பார்ம் அவுட் என் தடுமாறினார்.

வாய்ப்பு இல்லை
2009ஆம் ஆண்டுக்கு பின் அவர் இரண்டு ஆண்டுகள் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அப்போது அவர் 2009 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு அதிக விக்கெட் வீழ்த்தி இருந்தார். எனினும், அவருக்கு இந்திய அணியில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இங்கிலாந்து வாய்ப்பு
2011இல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு கடைசி நேரத்தில் ஒரு பந்துவீச்சாளரின் காயத்தால் இடம் பெற்றார். ஆனால், அப்போது அவரால் தன் முத்திரையை பதிக்க முடியவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. ஒருநாள் தொடரிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.

நட்பு மாறவில்லை
2011க்குப் பின் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இருவரும் ஒன்றாக தங்கள் சர்வதேச கிரிக்கெட் வாழ்வை தொடங்கினாலும் தோனி கேப்டனாகி தொட முடியாத உயரத்திற்கு சென்று விட்டார். எனினும், அவர் அதே நட்புடன் தான் இன்று வரை பழகுகிறார் என கூறி உள்ளார் ஆர்பி சிங். ஆனால், கேப்டனாக தோனி அவருக்கு சரியான பதில் சொல்லவில்லை என்பதை சுட்டிக் காட்டி இருக்கிறார்.

சரியான பதில் இல்லை
தனக்கு ஏன் அணியில் இடம் அளிக்கப்படவில்லை என்ற கேள்விக்கு சரியான பதில் கிடைக்கவில்லை என கூறிய ஆர்பி சிங், அது பற்றி தோனி கூறுகையில், நீங்கள் கடுமையாக உழைக்கிறீர்கள். ஒருவேளை அதிர்ஷ்டமும் காரணமாக இருக்கலாம் என கூறி உள்ளார்.

சிறப்பாக ஆடியும்..
தான் சிறப்பாக ஆடிய போதும் தன்னால் டெஸ்ட், ஒருநாள் அணிகளில் இடத்தை தக்க வைக்க முடியவில்லை என்றும், ஐபிஎல்-இல் மூன்று, நான்கு சீசன்களில் தான் அதிக விக்கெட் வீழ்த்தி இருந்த போதும் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறினார் ஆர்பி சிங்.

கேப்டனுக்கு நம்பிக்கை இல்லை?
மேலும், ஒருவேளை கேப்டன் என் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம் அல்லது என் திறன் உண்மையிலேயே தாழ்ந்து போயிருக்கலாம் என தன் மன வேதனையை பகிர்ந்து கொண்டார் ஆர்பி சிங். அவர் சொல்லும் அந்த கேப்டன், அவரது நண்பர் தோனி தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











