சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிராக ராஜஸ்தான அணி திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2008 ஆம் ஆண்டு பிறகு முதல் வெற்றியை ராஜஸ்தான் அணி பதிவு செய்திருக்கிறது.
இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், எங்கள் அணி வீரர்கள் செயல்பட்டு விதத்திற்கு அவர்களைப் பாராட்ட வேண்டும். பந்து வீச்சாளர்கள் நெருக்கடியான சமயத்தில் கூலாக செயல்பட்டு நன்றாக பந்து வீசினார்கள்.

பில்டிங்கில் எங்களுடைய வீரர்கள் கேட்ச்களை பிடித்தார்கள். சேப்பாக்கம் மைதானத்தில் எனக்கு நல்ல நினைவுகளே கிடையாது. நாங்கள் இங்கு ஒரு முறை கூட வெற்றி பெற்றது கிடையாது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெல்ல வேண்டும் என நினைத்தோம். ஆடுகளத்தில் பந்து சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்பட்டதால் நாங்கள் இம்பேக்ட் வீரராக ஜாம்பாவை கொண்டுவர நினைத்தோம்.
பந்துவீசும் போது நாங்கள் பவர் பிளேவில் சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை ஆட்டம் இழக்க செய்தது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. பவர் பிளேவில் அதிக ரன்களை கொடுக்காமல் தாண்டி விட்டால் அதன் பிறகு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து போட்டியை நகர்த்தலாம் என நினைத்தேன்.
கடைசி இரண்டு ஓவர்கள் கடும் நெருக்கடியாக இருந்தது. ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்ல நினைத்தேன். ஏனென்றால் தோனி களத்தில் இருக்கும் போது எப்போதுமே எதிரணிக்கு ஆபத்துதான். தனி ஆளாக தோனியால் என்ன செய்ய முடியும் என்று அனைவருக்கும் தெரியும். அதற்கு நாம் உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்று சாம்சன் கூறினார்.
அப்போது, வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர், தோனிக்கு எதிராக எந்தத் திட்டத்தை கையாண்டீர்கள் என கேட்டார். அதற்கு சஞ்சு சாம்சன் தோனிக்கு எதிராக எந்த திட்டத்தை வகுத்தாலும் அது வேலைக்கு ஆகாது என்று பதில் அளித்தார்.