ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணியை வீழ்த்துவது மிகவும் கடினம். அதுவும் தோனி போன்ற கேப்டன் இருக்கும் அணியை யுத்திகள் அமைத்து வெற்றி பெறுவது என்பதெல்லாம் சாதாரண காரியம் அல்ல.
ஆனால் இந்த விஷயத்தில் சஞ்சு சாம்சன், கில்லாடியாக இருக்கிறார். தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியை தொடர்ந்து நான்கு முறை வீழ்த்தியுள்ள சஞ்சு சாம்சன், ஜித்தனுக்கு எல்லாம் ஜித்தன் என்பதை நிரூபித்து விட்டார்.

இந்த நிலையில் சிஎஸ்கே வீழ்த்தியது குறித்து பேசிய சஞ்சு சாம்சன், நாங்கள் கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவினோம். இதனால் இந்த வெற்றி எங்கள் அணியின் சூழலுக்கும் எங்களுடைய ரசிகர்களுக்கும் மிகவும் தேவையாக இருந்தது. ஜெய்ப்பூரில் இது எங்களுடைய முதல் வெற்றி ஆகும். ஆடுகளம் போகப்போக தோய்வாக மாறும் என்று நான் கணித்தேன்.
இதனால் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தேன். நாங்கள் முதலில் பேட்டிங் செய்தாலும் எங்கள் அணியின் இளம் வீரர்கள் தான் சிறப்பான ஒரு பணியை செய்து இருக்கிறார்கள். சரிவை சந்தித்தாலும் அடித்து ஆட வேண்டும் என்ற அவர்களுடைய மன உறுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதற்கெல்லாம் முழு பாராட்டு எங்கள் அணி நிர்வாகத்துக்கு தான் சேரும். ஜெய்ஸ்வால் போட்டிகள் இல்லாத நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அகாடமியில் தான் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார்.
அவருக்கு எங்கள் அணி உதவியாளர்கள் பக்க பலமாக நின்றனர். எனவே இந்த வெற்றி அவர்களால்தான் கிடைத்தது என்று நான் கூறுவேன். நாங்கள் விளையாடி வரும் முறை எனக்கு பெருமையை அளிக்கிறது என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். 43 பந்துகளில் 77 ரன்கள் அடித்த ஜெய்ஸ்வால் இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றுள்ளது.