சொதப்பல் பேட்டிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியில் எந்த பேட்ஸ்மேனும் நிலைத்து நின்று ஆடவில்லை. ரஹானே 14, பட்லர் 23, சாம்சன் 6, ஸ்மித் 15, திரிபாதி 10 என சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
151 ரன்கள்
பென் ஸ்டோக்ஸ் 26 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அணிக்கு ஆறுதல் அளித்தார். கடைசி நேரத்தில் ஸ்ரேயாஸ் கோபால் 7 பந்துகளில் 19 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 151 ரன்களை எட்டியது. சென்னை அணியில் தீபக் சாஹர் 2, மிட்செல் சான்ட்னர் 1, ஷர்துல் தாக்குர் 2, ஜடேஜா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். ஷர்துல் தாக்குர் மட்டும் ஓவருக்கு 11 ரன்கள் கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.
சென்னைக்கு அதிர்ச்சி
அடுத்து 152 ரன்களை சேஸ் செய்ய வந்த சென்னை அணிக்கு பெரும் அதிர்ச்சியாக வாட்சன் 0, டு ப்ளேசிஸ் 7, ரெய்னா 4, ஜாதவ் 1 ரன்னில் ஆட்டமிழந்து வரிசையாக நடையைக் கட்டினர். சென்னை அணி 5.5 ஓவர்களில் 24 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்தது.
அரைசதம் அடித்தனர்
அப்போது அம்பதி ராயுடு, தோனி ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவரும் அரைசதம் அடித்து அணியை மீட்டு வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினர். 18வது ஓவரில் அம்பதி ராயுடு 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவர்
கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு போட்டியை எடுத்துச் சென்றார் தோனி. கடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். கடைசி ஓவரின் முதல் பந்தை சந்தித்த ஜடேஜா சிக்ஸ் அடித்து தெறிக்க விட்டார்.
3 பந்துகளில் 8 ரன்கள்
அதன் பின் நோ பால் வீசினார் ஸ்டோக்ஸ். அந்த பந்தில் 2 ரன்கள், அடுத்த பந்தில் 2 ரன்கள் கிடைத்தது. அந்த ஓவரின் 3வது பந்தில் தோனி ஆட்டமிழந்தார். கடைசி 3 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. மிட்செல் சான்ட்னர் களத்திற்கு வந்தார். சென்னை தோல்வி அடையும் என்பதே பலரின் எண்ணமாக இருந்தது.
நோ பால் சர்ச்சை
அவர் சந்தித்த முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்தார். அந்த பந்து உயரமான ஃபுல் டாஸாக சென்றதால் நோ பால் என்ற சர்ச்சை எழுந்தது. அவுட்டாகி வெளியே சென்ற தோனி, மீண்டும் களத்துக்கு வந்து அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனினும், அம்பயர் மறுத்துவிட்டார்.
கடைசியில் சிக்ஸ்
இதன்பின் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை என்ற நிலை. ஸ்டோக்ஸ் வைடு வீசினார். பின்னர் 3 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தார் சான்ட்னர். சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி ஓவரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ஒரு வழியாக வெற்றி பெற்றது.
ரஹானே செய்த தவறு
ராஜஸ்தான் கேப்டன் ரஹானே கடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸ்-இடம் கொடுத்து பெரிய தவறை செய்தார். அதன் பலனாகவே போட்டியில் ராஜஸ்தான் தோல்வி அடைந்தது. கடைசி ஓவரில் 1ஒரு நோ பால், ஒரு வைடு என மோசமாக வீசினார் ஸ்டோக்ஸ். தோனி விக்கெட் எடுத்தது மட்டுமே சிறப்பான விஷயமாக அமைந்தது.