
கடைசி ஓவர்
ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 152 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு வந்தது. அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளில் 10 ரன்கள் எடுத்து தோனி விக்கெட்டையும் இழந்தது சென்னை.

நோ-பால் குழப்பம்
அந்த ஓவரின் 4வது பந்தை சான்ட்னர் சந்தித்தார். பந்தை ஃபுல் டாஸாக வீசினார் பென் ஸ்டோக்ஸ். பந்து பேட்ஸ்மேன் மார்பு உயரத்துக்கும் மேல் வந்தது. முதலில் அம்பயர் இந்த பந்து நோ-பால் என சைகை செய்தார். ஆனால், ஸ்குவையர் லெக் அம்பயர், இது நோ-பால் இல்லை என்றார்.

உள்ளே வந்த தோனி
எனவே, நோ பால் திரும்பப் பெறப்பட்டது. இதைக் கண்ட ஜடேஜா அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது விக்கெட்டை இழந்து வெளியே சென்ற தோனி, பவுண்டரி அருகே இருந்து களத்துக்குள் நுழைந்தார்.

நம்ம தோனியா இது?
அங்கே முதலில் ஒரு அம்பயர் நோ-பால் என கூறியதை சுட்டிக் காட்டிய தோனி, இது நோ-பால் தான் என வாக்குவாதம் செய்தார். குறிப்பாக, கையை காட்டி குறிப்பிட்டு தோனி பேசியதை கண்டு, "நம்ம "கேப்டன் கூல்" தோனியா இது?" என ஆச்சரியம் அடைந்தனர்.

ஜடேஜா செய்ததே தவறு
எனினும், அம்பயர் அந்த பந்தை நோ-பால் என அறிவிக்கவில்லை. பின்னர் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார் சான்ட்னர். ஜடேஜா களத்தில் ஆடிக் கொண்டிருந்த பேட்ஸ்மேன். அவர் அம்பயருடன் வாக்குவாதம் செய்ததே தவறு என்றாலும், அம்பயர் புகார் கூறாவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.

அபராதம்
ஆனால், வெளியே இருந்த தோனி, கேப்டன் என்றாலும், மீண்டும் களத்துக்குள் வந்தது விதிப்படி எல்லை மீறிய செயல் என கூறப்படுகிறது. எனவே, தோனிக்கு அபராதம் அல்லது ஒரீரு போட்டி தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications