கவுஹாத்தி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் குறைவாக எடுத்தும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றதாகவும், அது எப்படி நடந்தது என்பது பற்றியும் அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் போட்டி முடிந்த உடன் கூறினார். இந்தப் போட்டியில் என்ன நடந்தது, ரியான் பராக் என்ன கூறினார் என பார்க்கலாம்.
2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் தனது முதல் வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகப் பெற்று இருக்கிறது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் தற்காலிக கேப்டன் ரியான் பராக் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அவரது பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் கேப்டன்சி முறை அபாரமாக இருந்தது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக ஆடிய சிஎஸ்கே அணி கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் சந்தீப் ஷர்மாவிடம் பந்தை அளித்தது மிகவும் முக்கியமான வியூகமாக அமைந்தது. சந்தீப் சர்மா சிறப்பாக பந்து வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மேலும், முதல் பந்திலேயே தோனியின் விக்கெட்டையும் வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
இந்த முடிவு மற்றும் இந்த வெற்றியைப் பற்றி ரியான் பராக் பேசுகையில், "இந்த முதல் வெற்றிக்கு நீண்ட காலம் ஆகிவிட்டது. இரண்டு போட்டிகளில் தான் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்றாலும், அது மிகவும் நீண்ட காலம் போல எனக்குத் தோன்றுகிறது. நாங்கள் இந்தப் போட்டியில் 20 ரன்கள் குறைவாக எடுத்ததாகவே நான் நினைக்கிறேன்."
"நாங்கள் நடு ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் ஆடினோம். ஆனால், சில விக்கெட்டுகளை அப்போது இழந்தோம். அதன் பின் நாங்கள் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டோம். பந்துவீச்சாளர்கள் ஒன்றாக இணைந்து எங்கள் திட்டங்களைச் செயல்படுத்தினார்கள். இரண்டு கடினமான ஆட்டங்களில் நாங்கள் ஆடி இருந்தோம்."
"முதல் போட்டியில் சுமார் 280 ரன்களை நாங்கள் சேஸிங் செய்ய முயன்றோம். இரண்டாவது போட்டியில் 180 ரன்களை எங்களால் எட்ட முடியவில்லை. ஆனால், இந்தப் போட்டியில் எங்களுக்கு சில வாய்ப்புகள் இருந்தன. நானும், நிதீஷ் ராணாவும் அதிரடியாக ஆடினோம். இன்று எனது உள்ளுணர்வின் அடிப்படையில் கேப்டன்சி முடிவுகளைச் செய்தேன். ஃபீல்டிங்கின் மூலம் நாங்கள் சுமார் 20 ரன்களைக் கூடுதலாக தடுத்து நிறுத்தினோம்" என்றார் ரியான் பராக்.
பேட்டிங்கில் விட்ட 20 ரன்களை ஃபீல்டிங்கில் சரி செய்ததாக ரியான் பராக் கூறி இருக்கிறார். அதுவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. ரியான் பராக் சொன்னதைப் போலவே அந்த அணி ஃபீல்டிங்கில் துல்லியமாக செயல்பட்டது. ஆனால் மறுபுறம் சிஎஸ்கே அணியும் ஃபீல்டிங்கில் படுமோசமாக இருந்தது.
ரியான் பராக் இந்தப் போட்டியில் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தார். நிதீஷ் ராணா அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 81 ரன்கள் எடுத்திருந்தார். அவரது அதிரடி ஆட்டம் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய அழுத்தத்தைத் தந்தது.
செய்தி சுருக்கம்:
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸை ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றது.
ராஜஸ்தான் அணியின் தற்காலிக கேப்டன் ரியான் பராக் சிறப்பாக செயல்பட்டார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்தது.
கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சந்தீப் சர்மா சிறப்பாக பந்து வீசினார்.
தோனியின் விக்கெட்டை சந்தீப் சர்மா வீழ்த்தினார்.
ரியான் பராக் மற்றும் நிதீஷ் ராணா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது.
சிஎஸ்கே அணியின் ஃபீல்டிங் மோசமாக இருந்தது.