ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி, முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் அசால்ட்டாக விலகி நின்று கவர்ஸ் திசையில் சிக்சர் அடித்திருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 36வது லீக் போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் கேப்டன் பொறுப்பை ரியான் பராக் ஏற்றுக் கொண்டார். அதேபோல் இந்த போட்டியில் 14 வயதாகும் சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதன் மூலமாக ஐபிஎல் வரலாற்றிலேயே 14 வயதில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்தார். இதனால் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களை விளாசியது.
இதன்பின் 181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி யஷஸ்வி ஜெய்ஸ்வால் - வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. லக்னோ அணி தரப்பில் முதல் ஓவரை வீச ஷர்துல் தாக்கூர் வந்தார். இந்த ஓவரிம் 4வது பந்தை எதிர்கொள்ள வைபப் சூர்யவன்ஷி வந்தார். ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் கொஞ்சம் விலகி சென்று கவர்ஸ் திசையை நோக்கி சிக்ஸ் அடித்து அலற வைத்தார்.
ஐபிஎல் தொடரில் விளையாடிய முதல் பந்திலேயே வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸ் அடித்திருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஆவேஷ் கான் வீசிய 2வது ஓவரிலும் சிக்ஸ் விளாசி அசத்தினார். இதனால் வைபவ் சூர்யவன்ஷி மிகச்சிறந்த பவர் ஹிட்டர் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.1.1 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் வைபவ் சூர்யவன்ஷி வாங்கப்பட்டார். அது வெறும் மார்க்கெட் திட்டமாக பார்க்கப்பட்ட போது, திடீரென சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக வந்து முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்களிடையே வைபவ் சூர்யவன்ஷி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.