மும்பை: ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கும் தனக்கும் இடையில் எந்த மோதலும் இல்லை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரின் போது அனைவரும் சேர்ந்தே முடிவுகள் எடுத்ததாக கூறிய டிராவிட், சஞ்சு சாம்சனின் ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னரே அவர் விளையாடுவாரா என்பது தெரியும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் அணி தரப்பில் ஆர்ச்சரை பவுலிங் செய்ய வைக்கலாம் என்று சஞ்சு சாம்சனும், சந்தீப் சர்மாவை பவுலிங் செய்ய வைக்கலாம் என்றும் ராகுல் டிராவிட்டும் முடிவு செய்துள்ளனர்.

இன்னொரு பக்கம் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் - ரியான் பராக்கை கேப்டன் சஞ்சு சாம்சன் முன்னிலைப்படுத்தி இருக்கிறார். ஆனால் ராகுல் டிராவிட் மீண்டும் ஹெட்மயரை முன்னிலைப்படுத்தி இருக்கிறார். இதனை ஏற்காமல் ராஜஸ்தான் அணி நிர்வாகம் செயல்பட்டதால், ராகுல் டிராவிட் நடத்திய ஆலோசனையில் கூட சஞ்சு சாம்சன் பங்கேற்கவில்லை.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணிக்குள் கேப்டன்சி தொடர்பாக ஜெய்ஸ்வால் - ரியான் பராக் இடையில் மோதல் வெடித்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இன்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி விளையாடவுள்ளது.
இதற்கு முன்பாக ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், எனக்கும் சஞ்சு சாம்சனுக்கும் பிரச்சனையா.. இதுபோன்ற தகவல் எங்கிருந்து உங்களுக்கு கிடைக்கிறது என்றே தெரியவில்லை.. நானும் சஞ்சு சாம்சனும் ஒத்த கருத்துடன் பணியாற்றி வருகிறோம். சூப்பர் ஓவரின் போது எடுக்கப்பட்ட முடிவுகளின் போது சஞ்சு சாம்சனும் உடனிருந்தார்.
நாங்கள் மட்டுமல்லாமல் பயிற்சியாளர்கள் குழு, அனலிஸ்ட் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்தே முடிவுகளை எடுத்தோம். அந்த முடிவுகள் எங்களுக்கு பின்னடைவை கொடுத்தது. பிரத்யேக நிபுணர்கள் எடுக்கும் முடிவுகளும் கூட சரியாக இருக்கும் என்பது கிடையாது. ஆனால் எங்கள் அணி மீதும், வீரர்கள் மீதும் நம்பிக்கை உள்ளது. அதேபோல் சஞ்சு சாம்சனின் முடிவுகளுக்கும் அனைத்து ஆதரவும் இருக்கிறது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து சஞ்சு சாம்சனின் காயம் தொடர்பான கேள்விக்கு, சஞ்சு சாம்சன் வயிற்று பகுதியில் வலியுடன் இருக்கிறார். இதனால் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். அதன் முடிவுகள் கிடைத்த பின் தான் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.