ஜெய்ப்பூர்: டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து கடைசி ஓவர்களில் தோல்வியை சந்தித்திருப்பது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ராஜஸ்தான் அணியின் இந்த தோல்விக்கு ராகுல் டிராவிட் மற்றும் அந்த அணி நிர்வாகிகள் எடுத்த மோசமான முடிவே காரணமாக பார்க்கப்படுகிறது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. 90 சதவிகிதம் ஆட்டத்தை ராஜஸ்தான் அணி கட்டுப்படுத்தி இருந்த நிலையில், கடைசி 3 ஓவர்களில் லக்னோ அணியின் பவுலர்கள் போட்டியை மொத்தமாக திருப்பிவிட்டனர். இதனால் ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறது.

இனி வரும் 6 போட்டிகளில் அனைத்திலும் வென்றால் மட்டுமே ராஜஸ்தான் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். நேற்றைய ஆட்டத்தில் கடைசி 2 ஓவர்களுக்கு 20 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு தேவையாக இருந்தது. அப்போது ராஜஸ்தான் அணியால் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களான ஹெட்மயர் மற்றும் துருவ் ஜுரெல் களத்தில் இருந்தனர்.
ஆனாலும் ராஜஸ்தான் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருக்கிறது. ஏற்கனவே டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்டது. அப்போதும் ஹெட்மயர் - துருவ் ஜுரெல் கூட்டணியே களத்தில் இருந்தது. அதிலும் வெல்ல முடியாமல் சூப்பர் ஓவரில் சென்று ராஜஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது.
ராஜஸ்தான் அணியால் தக்க வைக்கப்பட்ட 2 முக்கிய பேட்ஸ்மேன்களால் கூட அந்த அணியை வெற்றிபெற வைக்க முடியவில்லை. ஃபினிஷர் என்ற போர்வையில் ஹெட்மயர் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இத்தனைக்கு ராஜஸ்தான் அணி துருவ் ஜுரெலை ரூ.14 கோடிக்கும், ஹெட்மயரை ரூ.11 கோடிக்கும் தக்க வைத்திருந்தது.
ஒருவேளை ஆர்ச்சர் மற்றும் ஹசரங்கா உள்ளிட்டோர் இருந்திருந்தால் கூட ராஜஸ்தான் அணி ஒரு போட்டியிலாவது வென்றிருக்கும். இதனால் ராஜஸ்தான் அணி ரிடென்ஷனிலேயே மோசமான முடிவு எடுத்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. பட்லர் மற்றும் சாஹல் ஆகியோரை ராஜஸ்தான் அணி ரீடெய்ன் செய்ய முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும்.
அதேபோல் ஹெட்மயர் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோரில் ஒருவரை மீண்டும் ஏலத்தில் எடுத்திருக்க முடியும். ஆனால் 4 பேட்ஸ்மேன்கள், சந்தீப் சர்மா என்று ரிடென்ஷன் முடிவு எடுத்தது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சஞ்சு சாம்சன் காயம் அடைந்தால் என்ன நடக்கும் என்பதை அந்த அணி நிர்வாகம் கொஞ்சம் கூட சிந்திக்கவில்லை என்று பார்க்கப்படுகிறது.