ஜெய்ப்பூர்: லக்னோ அணியால் ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட், இதுவரை 7 இன்னிங்ஸ்களில் சேர்த்து வெறும் 106 ரன்களை மட்டுமே விளாசி இருக்கிறார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் 9 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த போது, அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா சோகத்தில் புலம்ப தொடங்கினார்.
ஐபிஎல் தொடரின் 36வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து லக்னோ அணி தரப்பில் மிட்சல் மார்ஷ் - மார்க்ரம் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் மிட்சல் மார்ஷ் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

தொடர்ந்து வந்த அதிரடி வீரரான நிக்கோலஸ் பூரன் 8 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதனால் லக்னோ அணி 46 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினார். சிஎஸ்கே அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் 49 பந்துகளுக்கு 63 ரன்கள் சேர்த்திருந்தார்.
இதனால் மீண்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை மீட்டெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிஷப் பண்ட் 9 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். ஹசரங்கா வீசிய பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்கிறேன் என்று விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். இதனால் லக்னோ அணி 54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த ஐபிஎல் சீசனில் ரிஷப் பண்ட் பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருந்து வருகிறது. சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியை தவிர்த்து ரிஷப் பண்ட் வேறு எந்த ஆட்டத்திலும் கவுரவமான ஸ்கோரை கூட எடுக்கவில்லை. மொத்தமாக 7 இன்னிங்ஸில் ஆடியுள்ள ரிஷப் பண்ட் வெறும் 106 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார்.
இதுவரை நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு சென்ற வீரர் ரிஷப் பண்ட் தான். லக்னோ அணியால் ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்டு கேப்டன்சி பதவியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெய்ப்பூர் மைதானத்தில் ரிஷப் பண்ட் ஆட்டத்தை பார்த்த லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா ரிஷப் பண்ட் விக்கெட்டால் புலம்பி வருகிறார்.