ஜெய்ப்பூர் : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 52 பந்துகளில் 82 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 4வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து லக்னோ அணி களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஜெய்ப்பூர் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், ராஜஸ்தான் அணி இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தான் அணி தரப்பில் ஜெய்ஸ்வால் - பட்லர் கூட்டணி களமிறங்கியது.

இதில் பட்லர் 11 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் சஞ்சு சாம்சன் களம் புகுந்தார். இருவருமே அதிரடியாக விளையாடிய நிலையில், ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் வேகமாக எகிறியது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 12 பந்துகளில் 24 ரன்களில் ஆட்டமிழக்க, திடீரென நம்பர் 4ல் ரியான் பராக் களமிறக்கப்பட்டார். இவர்கள் யாஷ் தாக்கூர் வீசிய ஒரே ஓவரில் 3 சிக்ஸ் உட்பட 21 ரன்களை விளாசினர்.
இதனால் 10 ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 89 ரன்கள் சேர்த்திருந்தது. பின்னர் ரியான் பராக் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் போட்டிப்போட்டு சிக்ஸ் அடிக்க, ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் மேகமாக எகிறியது. சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் தனது அரைசதத்தை விளாசினார். ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் அடிக்கும் 21வது அரைசதம் இதுவாகும்.
2020 முதல் கடந்த 5 சீசன்களாக ஒவ்வொரு முறையும் முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2020ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 32 பந்துகளில் 74 ரன்களையும், 2021ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 63 பந்துகளில் 119 ரன்களையும், 2022ஆம் ஆண்டு ஐதராபாத் அணிக்கு எதிராக 27 பந்துகளில் 55 ரன்களையும், 2023ஆம் ஆண்டு ஐதராபாத் அணிக்கு எதிராக 32 பந்துகளில் 55 ரன்களையும் சஞ்சு சாம்சன் விளாசியுள்ளார்.
அதேபோல் இந்த போட்டியிலும் 52 பந்துகளில் 82 ரன்களை சேர்த்து அசத்தியுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பேக் அப் விக்கெட் கீப்பர் யார் என்று இதுவரை தேர்வு செய்யப்படாமல் உள்ளது. அந்த இடத்திற்கு துருவ் ஜுரெல், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் ஆகிய 3 பேரும் போட்டியில் உள்ளனர். இதனால் ஐபிஎல் தொடரில் 600 ரன்களுக்கு மேல் சஞ்சு சாம்சன் அடிக்கும் பட்சத்தில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.