ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் - மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை பார்த்த இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் மேனேஜரான சவுத்கேட் வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் அணியின் ஜெர்சியுடன் காணப்பட்ட சவுத்கேட், திடீரென இந்தியா வந்தது ஏன் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் 50வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இரண்டாம் பாதியில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், ராஜஸ்தான் அணி இந்த முடிவை எடுத்திருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தால், பிளே ஆஃப் சுற்றுக்கான ரேஸில் இருந்து வெளியேறும் என்று பார்க்கப்படுகிறது. சொந்த மண்ணில் விளையாடுவதால், அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. இதனிடையே ராஜஸ்தான் அணியின் நட்சத்திர பவுலரான சந்தீப் சர்மாவுக்கு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆகாஷ் மத்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதன்பின் மும்பை அணி தரப்பில் ரிக்கல்டன் - ரோஹித் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ஆர்ச்சர் மற்றும் ஃபரூக்கி ஆகியோரின் முதல் ஸ்பெல்லில் அடக்கி வாசித்த இருவரும், அதன்பின் அதிரடிக்கு திரும்பினர். குறிப்பாக ரிக்கல்டனின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமல் ராஜஸ்தான் அணியின் பவுலர்கள் திண்டாடினர்.
இதனால் பவர் பிளே ஓவர்களின் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 58 ரன்களை எடுத்திருந்தது. இந்த நிலையில் திடீரென கேமராமேன் திரையில் ஒரு ஆண் முகத்தை க்ளோசப்பில் காட்டினார். வழக்கமாக பெண்களை மட்டும் ஃபோகஸ் செய்யும் கேமராக்கள், ஆச்சரியம் அளிக்கும் வகையில் எப்படி ஆண்களை காட்டியது என்று பலரும் குழம்பினர்.
அதனால் நிச்சயமாக அவர் நட்சத்திரமாக இருப்பார் என்று கருதப்பட்டது. இதன்பின் விசாரிக்கும் போது, ராஜஸ்தான் ஜெர்சியுடன் அமர்ந்திருந்த அந்த ஆண் இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் மேனேஜரான சவுத்கேட் என்பது தெரிய வந்தது. 2016ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணியின் மேனேஜராக செயல்பட்டு வந்த அவர், 2024ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். இவர் எப்படி திடீரென ராஜஸ்தான் அணியின் ஜெர்சியுடன் இந்தியாவில் இருக்கிறார் என்று கால்பந்து ரசிகர்கள் பலரும் குழம்பி வருகின்றனர்.