கேப்டவுன்:
20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பால் காலிங்வுட் ஆபாச நடனம் அரங்கேறும் கிளப்பில் குடித்து விட்டு கும்மாளம் போட்டதால் அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ரூ. 85,000 அபராதம் விதித்துள்ளது.
வெளிநாடுகளுக்கு டூர் போகும்போது கிரிக்கெட் வீரர்கள் அப்படி, இப்படி இருப்பது சாதாரணமான விஷயம்தான். கடந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின்போது, மேற்கு இந்தியத் தீவு கடற்கரையில் குடிபோதையில் கும்மாளமிட்டதற்காக இங்கிலாந்துப் பந்து வீச்சாளர் பிளின்டாப் சர்ச்சைக்கு ஆளானார்.
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவில் நிர்வாண நடனம் நடக்கும் கிளப்பில் குடித்து விட்டு, ஆட்டமும், பாட்டமுமாக இருந்த கேப்டன் காலிங்வுட் சிக்கலில் மாட்டியுள்ளார்.
அணி நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் காலிவுங்வுட் அங்கு சென்று குடித்துள்ளார். அத்தோடு அழகிகளோடும், ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியுள்ளார்.
இதற்கு அடுத்த நாள் தென் ஆப்பிரிக்காவுடன் நடந்த சூப்பர் 8 போட்டியில் இங்கிலாந்து கேவலமாக தோற்றது. அத்தோடு நில்லாமல், நேற்று நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. அத்தோடு, 20-20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்தும் வெளியேற்றப்பட்டு விட்டது.
இதனால் கடுப்பான இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் காலிங்வுட்டுக்கு ரூ. 85 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
போனது தப்புத்தான் - காலிங்வுட் புலம்பல்:
இந்த நிலையில், தனது செயல் தவறானது என்று காலிங்வுட் கூறியுள்ளார். அவர் கூறுகையில், நிர்வாண விடுதிக்கு போயிருக்கக் கூடாதுதான், தப்புத்தான்.
போய் கொஞ்சமாகத்தான் பீர் சாப்பிட்டேன். அப்புறம்தான் தெரிந்தது, நான் தப்பான இடத்துக்கு வந்தது. அப்புறமும் அங்கு நான் இருக்கவில்லையே, உடனே வெளியேறி விட்டேன்.
ஆனால் இந்தப் பத்திரிக்கையாளர்கள்தான் மிகைப்படுத்தி விட்டார்கள். இது எனக்கு நல்ல பாடம் என்று புலம்பியுள்ளார் காலிங்வுட்.