டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது நன்னடத்தை விதிமீறலாகும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து சச்சின் டெண்டுல்கர் சில நாட்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். அதே நாளில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இது பெரும் சர்ச்சையை நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் திபாஷிஷ், சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவித்ததை எதிர்த்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். அதில் சச்சின் டெண்டுல்கர் காங்கிரஸ் கட்சியால் நியமிக்கப்பட்ட ஒரு ராஜ்ய சபா எம்பி. அவருக்கு கோடிக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரமில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த சூழலில் அவர் கடந்த சனிக்கிழமையன்று மும்பையில் நடைபெற்ற 200வதுடெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார், அன்று சச்சின் மற்றும் அறிவியல் அறிஞர் சிஎன்ஆர். ராவ்க்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. சச்சினின் ரசிகர்களின் ஆதரவை பெறும் நோக்கத்தில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் நன்னடத்தை விதிமீறல் என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.