திருநெல்வேலி: டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் 3வது சீசனின் முதல் ஆட்டமே பரபரப்பாக இருந்தது. கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை, 4 விக்கெட் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வென்றது.
ஐபிஎல் பாணியில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இன்று முதல் ஆட்டம் நடந்தது. திருநெல்வேலியில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.
என். ஜெகதீசன் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹரி நிஷாந்த் 41. ரோஹித் 46 ரன்கள் எடுத்து வலுவான ஸ்கோரை கொடுத்தனர். ஆனால் மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 42 ரன்கள் எடுக்க ஸ்கோர் சற்று உயர்ந்தது. ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் தமிழ்குமரன், லட்சுமிநாராயணன், சஞ்சய் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். விக்னேஷ், சோனு யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
173 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ரூபி திருச்சி வாரியர்ஸ் தொடர்ந்து விக்கெட்களை இழந்தது. பரத் சங்கர் 39 ரன்கள் எடுத்தார். பாபா இந்திரஜித் 14, அரவிந்த் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் எஸ். சுரேஷ் குமார் ஆட்டமிழக்காமல் 24 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 45 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். சோனு யாதவ் 30 ரன்கள் எடுத்தார். சஞ்சய் ஆட்டமிழக்காமல் 11 ரன்கள் எடுத்தார்.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் அஸ்வின் 2, மொகம்மது, அபினவ், திரிலோக், ஆதித்யா அருண் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவை என்ற நிலையில், 21 ரன்கள் எடுத்தது திருச்சி அணி. இறுதியில் 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தி்ல் வென்றது.