லண்டன்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் இந்திய அணி வீரரான ருதுராஜ் கெய்க்வாட், இங்கிலாந்து கவுண்டி அணியில் பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷபிக் உடன் இணைந்து விளையாட இருக்கிறார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் போர் பதற்றம் நிலவியது. பின்னர் இரண்டு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்று தாக்குதல்களை நிறுத்தின. அதன் பிறகு இரு நாடுகளின் உறவு மேலும் மோசம் அடைந்து இருக்கிறது. குறிப்பாக இனி இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் தான் ருதுராஜ் கெய்க்வாட், பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷபிக் உடன் ஒரே அணியில் இணைந்து விளையாட இருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் கவுண்டி அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப் நடைபெற உள்ளது. அதில் யார்க்ஷயர் (Yorkshire) அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இடம் பிடித்திருக்கிறார்.

தற்போது அதே அணியில் பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷபிக் இணைந்து இருக்கிறார். வரும் ஜூன் 22 அன்று துவங்க உள்ள நாட்டிங்ஹாம்ஷயர் (Nottinghamshire) அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அப்துல்லா ஷபிக் இணைந்து விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை அடுத்து, போர் பதற்றத்திற்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட்டில் ஒன்றிணையும் முதல் நிகழ்வாக இது அமைந்துள்ளது. அதிலும் எதிரெதிர் அணிகளாக விளையாடாமல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் ஒரே அணியில் இடம் பெறும் வாய்ப்பும் அமைந்துள்ளது
இதற்கு முன் இது போன்ற சம்பவம் மிக அரிதாகவே நடந்துள்ளது. ஆசிய லெவன், உலக லெவன் போன்ற கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஒரே அணியில் இணைந்து ஆடி உள்ளனர். சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தின் போது பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த போது ஒரு பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தான் அணியில் வேறு மாற்று ஃபீல்டர்கள் இல்லாத காரணத்தால் பாகிஸ்தான் வீரராக சில ஓவர்கள் ஃபீல்டிங் செய்து இருக்கிறார்.
இப்படி அரிதாக சில சம்பவங்கள் நடந்துள்ளன. அதே சமயம், இது சில இந்திய ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் இந்தப் போட்டியில் விளையாடக் கூடாது எனவும் அவர்கள் தங்கள் எதிர்ப்பை கூறி வருகின்றனர்.
ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அப்துல்லா ஷபிக் இணைந்து விளையாடினால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் இணைந்து பேட்டிங் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுமா? அப்படி நடந்தால் அதை இதற்கு எதிராக இருக்கும் இந்திய ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? என்ற பல்வேறு சந்தேகங்களும் எழுந்துள்ளன.