சென்னை: சிஎஸ்கே அணியில் உள்ள சீனியர்கள் தமது பேச்சைக் கேட்கவில்லை என்றால் கன்னத்தில் அறைவேன் என்று ருதுராஜ் பேசியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அவர் காமெடிக்காக தான் இந்த பேச்சை பேசினார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருதுராஜ் தற்போது புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக சென்னை வந்துள்ளார். இந்த நிலையில் சிஎஸ்கே கிரிக்கெட் அகாடமியில் உள்ள இளம் வீரர்களுடன் ருதுராஜ் கெய்க்வாட் உரையாடல் நடத்தினார்.

அப்போது அங்கு இருந்த இளம் வீரர்களிடம் பேசிய ருதுராஜ், இங்கு இருப்பவர்களுக்கு எந்த ஐபிஎல் அணியை மிகவும் பிடிக்கும் என்று கேட்டார். அதற்கு அங்கிருந்த சில இடம் வீரர்கள் எங்களுக்கு ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் அணியை பிடிக்கும் என்று கூறினார்கள். இதைக் கேட்டவுடன் சிரித்துக் கொண்டே அப்போது நீங்கள் எல்லாம் வெளியே செல்லுங்கள்.
உங்களுடைய பெயரை எல்லாம் நாங்கள் ஞாபகம் வைத்துக் கொள்வோம். உங்களால் பெரிய ஆளானவுடன் சிஎஸ்கே அணிக்கு விளையாட முடியாது என்று சிரித்துக் கொண்டே கூறினார். உடனே அங்கிருந்த இளம் வீரர்களும் சிரித்தனர். எங்களுக்கும் சிஎஸ்கே பிடிக்கும் என்று பதில் அளித்தனர். அதற்கு மீண்டும் பதில் அளித்த ருதுராஜ், அதெல்லாம் கிடையாது.
முதலில் சிஎஸ்கேவை தான் சொல்ல வேண்டும் என்று கூறினார். இதனை அடுத்து அங்கிருந்த ஒரு சிறுவர், நீங்கள் சிஎஸ்கே அணிக்காக விளையாடுகிறீர்களா என்று கேட்கப்பட்ட போது, அதற்கு இல்லை நான் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறேன் என்று பதிலளித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த சிறுவர் ஒருவர் சீனியர் வீரர்களுடன் விளையாடியது எப்படி இருந்தது என்று கேட்டார்.
அதற்கு நன்றாக இருந்தது. நான் சீனியர் வீரர்களை எப்போதும் திட்டுவேன். என் பேச்சை கேட்கவில்லை என்றால் அறைந்து விடுவேன். ட்ரெஸ்ஸிங் ரூமில் அல்ல, எல்லாரும் முன்னாடியும் தான் அறைவேன் என்று பதில் அளித்தார். இதை நகைச்சுவைக்காக அவர் சொல்ல மற்ற சிறுவர்கள் சிரித்தனர். தவறாக பேசி விட்டோம் என சுதாரித்து கொண்ட ருதுராஜ், இந்த கேள்விக்கு மீண்டும் சீரியஸாக பேசி , நான் அவர்களுக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்தேன். எப்போதும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து நீங்கள் எதிர்கொண்ட பவுலர்களில் யார் கடினமானவராக நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, பவுல்ட் என பதிலளித்தார். அப்போது சோயிப் அக்தர் இல்லையா என்று ஒரு சிறுவர் கேட்க, அப்போதெல்லாம் நான் பிறக்கவே இல்லை என்று ருதுராஜ் பதிலளித்தார். உங்களுக்கு பிடித்த சிறந்த விக்கெட் கீப்பர் யார் என்று கேட்டதற்கு நீங்கள் என்னுடைய விக்கெட் கீப்பிங் பார்த்ததில்லையா? சோயிப் அக்தர் பந்து வீசுவதை பார்ப்பதற்கு பதில் என்னுடைய கீப்பங்கை யூடியூபில் பாருங்கள் என்று ருதுராஜ் பதிலளித்தார்.