லக்னோ: சிஎஸ்கே அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரை தொடர்ந்து கேப்டனாக அணியை வழிநடத்திய துலீப் டிராபி மற்றும் இராணி கோப்பை ஆகியவற்றிலும் தோல்வியடைந்திருப்பது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் கேப்டன்சிக்கு சரிபட்டு வரமாட்டார் என்று சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இராணி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா - மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இருந்தாலும் முதல் இன்னிங்ஸ் முன்னிலையை வைத்து மும்பை அணிக்கு கோப்பை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 27 ஆண்டுகளுக்கு பின் இராணி கோப்பையை வென்று மும்பை அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

அதேபோல் கடந்த 4 ஆண்டுகளாக ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியே கோப்பையை வென்று வந்த சூழலில், இம்முறை முதல்முறையாக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் களமிறங்கி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வி குறித்து ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், டாஸ் வென்று பவுலிங் செய்ததில் எந்த தவறும் கிடையாது. ஏனென்றால் முதல் செஷனில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணிக்கு அழுத்தம் கொடுத்தோம்.
சில கேட்ச்களை கோட்டைவிட்டாலும், ஆட்டத்தின் கட்டுப்பாட்டை வைத்திருந்தோம். ஆனால் சர்ஃபராஸ் கான் - தனுஷ் கோட்யான் பார்ட்னர்ஷிப் எங்களின் கணிப்பிற்கும் அதிகமாக சென்றது. அதேபோல் ஷர்துல் தாக்கூர் களமிறங்கி முக்கியமான ரன்களை விளாசினார். எங்கள் அணியில் அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் துருவ் ஜுரெல் இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.
ஆனால் டெய்லண்டர்களால் பேட்டிங்கில் பங்களிக்க முடியவில்லை. மும்பை அணியில் டெய்லண்டர்கள் தான் முக்கிய ரன்களையே விளாசினர். பவுலிங்கில் முதல் இன்னிங்ஸில் முகேஷ் குமாரும், 2வது இன்னிங்ஸில் சரன்ஷ் சிறப்பாக பங்களித்ததாக தெரிவித்தார். ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக தொடர்ச்சியாக பெறும் 3வது தோல்வி இதுவாகும்.
ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட ருதுராஜ் கெய்க்வாடால் சிஎஸ்கே அணியை அழைத்து செல்ல முடியவில்லை. அதன்பின் துலீப் டிராபி தொடரில் இந்திய சி அணியின் கேப்டனாக 2வது இடத்தில் தான் முடித்தார். தற்போது ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் கேப்டனாகவும் ருதுராஜ் கெய்க்வாட் ஏமாற்றத்தையே அளித்துள்ளார்.
இதனால் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சி மீதான சந்தேகம் ரசிகர்களிடையே வலுத்து வருகிறது. ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார், யாஷ் தயாள், சரன்ஷ், மானவ் சுதார் உள்ளிட்ட நட்சத்திர பவுலர்கள் இருந்த போதும், மும்பை அணியால் 537 ரன்கள் எடுக்க முடிந்தது. இதனால் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக சரியான திட்டத்தை உருவாக்கவில்லை என்று விமர்சிக்கப்படுகிறது.
அதேபோல் இராணி கோப்பையில் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தால், இந்தியா - ஆஸ்திரேலியா தொடருக்கான பேக் அப் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருந்தது. ஆனால் முதல் இன்னிங்ஸில் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்ததால், அந்த வாய்ப்பும் பறிபோனதாக ரசிகர்கள் விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.