மும்பை: சென்னை அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியின் அனைத்து வகையான கிரிக்கெட்டுக்குமான வீரராக தெரிகிறார் என்று ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
சென்னை அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்த தொடர்களில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் இந்தியாவில் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள கிரீஸில் இருந்து ஸ்டெப் அவுட் செய்து விளையாடக் கூடிய சில வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட்-ம் ஒருவர். இதனால் சீனியர் வீரர்களில் யாருக்கு காயம் ஏற்பட்டாலும் நிச்சயம் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். எந்த அளவிற்கு ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்வாரோ, அதே அளவிற்கு வேகப்பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்குவார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ருதுராஜ் கெய்க்வாட் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அதில், சர்பராஸ் கானுக்காக நான் அதிகமாக வருத்தம் கொள்கிறேன். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங் சராசரியாக 80க்கும் அதிகம் வைத்திருந்தும் இதுவரை அவரை இந்திய டெஸ்ட் அணிக்காக தேர்வு செய்யவே இல்லை. ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக இந்திய தேர்வுக் குழு வேறு வீரர்களை தேர்வு செய்து வருகிறது.
அதேபோல் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஆடி வரும் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், நம்பிக்கையான வீரராக தெரிகிறார். சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளுக்குமான வீரராக தெரிகிறார். அவரின் ஆட்டத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.