மும்பை: 2025 துலீப் டிராபி அரையிறுதிப் போட்டியில், மத்திய மண்டலத்திற்கு எதிரான போட்டியில் மேற்கு மண்டல அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 184 ரன்கள் குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான இந்திய 'ஏ' அணியில் இருந்து நீக்கப்பட்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் நடைபெற்ற துலீப் டிராபி அரையிறுதிப் போட்டியின் முதல் இன்னிங்சில், மேற்கு மண்டல அணி தடுமாறிய நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் தனி ஒருவராகப் போராடினார். வெறும் 206 பந்துகளில் 25 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 184 ரன்கள் எடுத்து, அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் தேவையான பொறுமையும், அதிரடியும் தன்னிடம் உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை தேர்வாளர்களுக்கு அழுத்தமாக நிரூபித்தார். ஆனால், இந்த அபாரமான ஆட்டத்திற்குப் பிறகும், ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிராக லக்னோவில் நடைபெறவுள்ள இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய 'ஏ' அணியில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இந்திய 'ஏ' அணியில் இடம்பெற்றிருந்தும், ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது முழுவதுமாக இந்தியா ஏ அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாத ஸ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான இந்திய 'ஏ' அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில், துலீப் டிராபியில் சிறப்பாக செயல்பட்ட பல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் ருதுராஜின் பெயர் இல்லாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ருதுராஜ் 184 ரன்கள் குவித்த அதே போட்டியில், கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ருதுராஜ் மட்டுமல்ல, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனான ரஜத் படிதாரும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
துலீப் டிராபியில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் படிதார், காலிறுதியில் வடகிழக்கு மண்டலத்திற்கு எதிராக 125 மற்றும் 66 ரன்களையும், தற்போது நடைபெற்ற அரையிறுதியில் 77 ரன்களையும் எடுத்துள்ளார். இத்தகைய சிறப்பான ஃபார்மில் உள்ள வீரரைத் தேர்வு செய்யாததும் ஆச்சரியத்தை அளிக்கிறது.
அதே நேரத்தில், தமிழ்நாடு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் நாராயண் ஜெகதீசன் மற்றும் டெல்லி ரஞ்சி அணியின் கேப்டன் ஆயுஷ் பதோனி ஆகியோர் இந்திய 'ஏ' அணியில் இடம்பிடித்துள்ளனர். துலீப் டிராபி அரையிறுதியில் வடக்கு மண்டலத்திற்கு எதிராக தெற்கு மண்டலத்திற்காக நாராயண் ஜெகதீசன் 197 ரன்கள் குவித்தார்.
அதேபோல், கிழக்கு மண்டலத்திற்கு எதிரான காலிறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஆயுஷ் பதோனி ஆட்டமிழக்காமல் 204 ரன்கள் எடுத்தார். இவர்களது சிறப்பான ஆட்டத்திற்குக் கிடைத்த பரிசாகவே இந்தத் தேர்வு பார்க்கப்படுகிறது.
ஒருபுறம் திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டாலும், மறுபுறம் துலீப் டிராபி போன்ற முக்கிய உள்நாட்டு தொடரில் சதமடித்து ஃபார்மில் இருக்கும் ருதுராஜ் மற்றும் ரஜத் படிதார் போன்ற வீரர்களைப் புறக்கணித்தது எந்த வகையில் நியாயம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். தேர்வாளர்களின் இந்த முடிவு, இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத் தேர்வுகளின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.